top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 352 - சூழ்நிலைக்கு பழிகடா ஆகிவிடாதீர்கள்..?

Updated: Sep 27, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-352

சூழ்நிலைக்கு பழிகடா ஆகிவிடாதீர்கள்..?


  • உணவு விடுதி நடத்திவரும் ஒருவர், சரியான விலையில் உணவுப் பொருட்களை வழங்கி, சிறப்பாக நடத்தி வந்தார். அதேசமயம் சில அதிகாரிகளின் முறையற்ற கெடுபிடி & மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம்காட்டி, உணவின் விலையை ஏற்ற முடியாதபோது, மூலப்பொருட்களின் அளவையும், தரத்தையும் மற்ற வியாபாரிகள் குறைத்தனர். அந்தமாதிரியான சூழலில், சரியாக வியாபாரம் செய்தவருக்கு குறைவான விலையில் சந்தைப்படுத்துவது கட்டுபடியாகவில்லை. தரத்தில் குறைக்கவும் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி பெரிதாய் பொருட்படுத்தாமல், தன் கடையில் பொருட்களின் விலையை 10% அதிகரித்து, நிரந்தரமாக ஒரே தரத்தில் தயாரித்து விற்றார்.

  • ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். அந்த வருடம், வியாபார வளர்ச்சி இல்லாததால், ஊதிய உயர்வும், விழாக்கால சன்மானங்களும் ஒருவருடம் கொடுக்கவில்லை. அதனால், அந்த நிறுவன ஊழியர் சங்கம் நிற்வாகிகள் சிலர், வெவ்வேறு தூண்டுதல்கள் & முன்பகைகளை மனதில்வைத்து, நிறுவனத்திற்கு எதிராக பணியில் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி செய்வது ஒரு நல்ல ஊழியருக்கு ஏற்புடையதா?

சரியான தரத்திற்கு பெயர் பெற்ற உணவு விடுதியில், பொருளுக்கான விலை என்பது ஒரு சாதாரண விடயம் தான். விலையை காரணம் காட்டி எல்லோரும் வெளியேளிவிடப் போவதில்லை. தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் சந்தையில் இருக்கத்தான் செய்கிறார்கள். நிறைவான தரத்தை உரிய விலையில் சந்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ளும். விலைவாசி உயர்வு என்பது வழக்கமான ஒரு சூழ்நிலைமாற்றம். அதை ஈடுசெய்ய பொருட்களின் தரத்திலும், அளவிலும் குறைத்தால், வாடிக்கையாளர் எப்படி நிலைப்பார்?


நிர்வாகம், வர்த்தக இழப்பு மற்றும் நஷ்டத்தின் காரணமாக ஒரு வருடம் சம்பள உயர்வு கொடுக்கவில்லை. அதற்காக நிர்வாகத்திற்கு எதிராக ஊழியர்கள் ஒத்துழையாமையை கையிலெடுத்தால், நிலைமை சரியாவதற்கு பதிலாக இன்னும் மோசம்தானே ஆகும். தொழிலாளர் உரிமை என்று ஒரு சிலர் வீரவசனங்கள் பேசலாம். ஆனால் இறுதியில் நிறுவனம் இருந்தால் மட்டுமே அந்த வேலையும், ஊதியமும் நிலைக்கும். இதை கருத்தில் கொள்ளாமல் ஊழியர்கள் நெறுக்கடி கொடுத்தால், நிலைமை ஒருசேர எல்லொருக்குமே மோசம் தான் ஆகும்!

  • உடல் நிலையை பற்றிக் கவலை கொள்ளாமல், வேலைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்தால், ஒருநாள் நீங்களே இல்லாமல் போய்விடக்கூடும். உங்களைக் காட்டிலும் வேலை முக்கியமில்லை. வேலையின் நிர்பந்தத்திற்காக உடல் ஆரோக்கியத்தை விட்டுவிடாதீர்கள்;

  • தவறானவர்களின் தூண்டுதல்களைக் கேட்டு, சின்னச் சின்ன மனஸ்தாபங்களை வளரவிட்டு விடாதீர்கள். உறவுகள் நீடிக்க சில விட்டுக்கொடுத்தல்கள் அவசியம். நீங்கள் கௌரவம் பார்த்து சமரசத்தை தவிர்த்தால், உறவுகளின் பிரிவு நிரந்தரமாகிவிடும்;

  • வியாபார நெருக்கடிகள் பல விதங்களில் வரும். ஆனால் அதற்காக பொருளின் தரத்திலும், அளவிலும் ஏமாற்ற ஆரம்பித்தால், நம்பிக்கையும் நாணயமும் இல்லாமல் போய்விடும்;

  • அரசியில் பிரமுகராக, அரசாங்க அதிகாரியாக உங்கள் பொது கடமைகளை செய்யும் போது, சில மிரட்டல்கள் வரும். சில சுயநலவாதிகளின் நெருக்கடிகள் வரும். அவற்றிற்கு வளைந்து கடமைகளில் முறைதவறினால், உங்களுக்கு நீங்கள் எப்படி உண்மையானவராக இருக்கமுடியும்;

  • நண்பர்களின் கேளிக்கை நிர்பந்தங்கள் வரும். ஆனால் படிக்கின்ற நேரத்தில் அவர்களோடு நீங்கள் சுற்றினால், உங்கள் இலக்குகளை எப்படி அடைவது?

நீங்கள் ஒரு செயலை திட்டமிட்டு செய்ய முனையும்போது, சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும். அந்த சூழ்நிலைகளில், உங்கள் இலக்கை நோக்கிய திட்டமிடலை சரிபார்த்து, தேவையான மாற்றம் செய்து முன்னேற வேண்டும். அதைவிடுத்து, அந்த இலக்கையே மாற்றினால், எப்படி சாதிக்க முடியும்?


ஒவ்வொரு சூழ்நிலை மாற்றங்களையும் கவனித்து, அவற்றின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல், சமாளித்து சாதிக்க என்ன செய்யலாம்?

  • உங்கள் திட்டங்கள் என்ன? சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்;

  • தேவைப்பட்டால், சில அடிகள் பின் சென்று, அடிப்படைகளை சீரமைத்து வாருங்கள்;

  • தேவைப்பட்டால், சிலவற்றை வேகப்படுத்தியோ / தாமதப்படுத்தியோ நிலைமை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்;

  • சூழ்நிலைக்கு பயந்து விலகிச் செல்லாமல், நம்பிக்கையானவர்களின் உதவியை நாடுங்கள்;

  • சவாலை சமாளிக்கும் நேர்மறையான கண்ணோட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.

  • ஒவ்வொரு செயல்பாட்டையும், முன்னேற்றத்தையும், முழுமையாக கண்காணியுங்கள்;

ஒரு பெண்ணாக, கால்களை இழந்தபின், வீட்டில் அடைந்து கிடக்காமல் அருனிமா சின்ஹா, இமயத்தின் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்து தன்னை நிரூபித்தார். அவர் சூழ்நிலைக்கு அடிபணியவில்லை. அதை தன்னால் மாற்றியமைக்க முடியும் என்று மன உறுதியோடு எதிர்கொண்டு வென்றார்.


வாழ்வில் பொருளாதார சவால்கள், உறவுகள் பிரச்சனை, சமுதாய நெருக்கடிகள், உடல்நலப் பிரச்சனைகள் என்று ஏதாவதொன்று வந்தகொண்டேதான் இருக்கும். அவற்றை பெரிதாக எடுத்துக்கொண்டு, அதையே பேசிப்பேசி நேரத்தை வீணடித்தால் நஷ்டம் யாருக்கு? சூழ்நிலைக்கு பழிகடாவானால், எதையும் முடிக்கமுடியாமல் நட்டாற்றில் நிற்க வேண்டியதுதான். அவற்றை எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றி நிச்சயம்!


எண்ணற்ற காரணங்களுக்காக

உங்களைச் சுற்றியுள்ளவைகள் எதுவேண்டுமானாலும்,

எப்படி வேண்டுமானாலும் மாறிவிடக்கூடும் – ஆனால்

சூழ்நிலைகளுக்காக உங்கள் கொள்கைகளை

உங்கள் நேர்மையை, கடைபிடித்த சத்தியத்தை

எதற்காகவும் சமரசம் செய்துவிடாதீர்கள்!


சூழ்நிலை உங்களை விலகி ஓடச்சொல்லும்!

சூழ்நிலை உங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லும்!

சூழ்நிலை உங்களிடம் அநீதியை நியாயப்படுத்தும்!

சூழ்நிலை உங்களை மிரட்டி பணியவைக்க முயற்சிக்கும்!

சூழ்நிலை உங்கள் உறவுகளை தூரப்படுத்தும்!

சூழ்நிலை உங்களை நண்பர்களை எதிரியாக்கும்!

சூழ்நிலை எதைவேண்டுமானாலும் செய்யட்டும்!

எந்த சூழ்நிலையிலும்

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது

உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது!


சூழ்நிலைக்கு அடிபணிந்து மாறப்போகிறீர்களா?

சூழ்நிலை சவால்களை வென்று சாதிக்கப்போகிறீர்களா?

அடிபணிபவர்கள் தொடரந்து மாறிக்கொண்டே இருக்கிறார்கள்!

சவாலை எதிர்கொள்பவர்கள் சூழ்நிலையை மாற்றியமைக்கிறார்கள்!

நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?


- [ம.சு.கு 26.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page