top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 332 - இருக்கிறதென்ற மனநிலை வளரட்டும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-332

இருக்கிறதென்ற மனநிலை வளரட்டும்..!


  • நியாய விலைக் கடையில் மண்ணெண்ணை மாதமொரு நாள் வழங்குவார்கள். அந்த மண்ணெண்ணை வாங்க கூட்டம் அலைமோதும். அவ்வப்போது பெரிய தள்ளுமுள்ளுகளும் ஏற்படும். எல்லோரும் வரிசையில் நின்று பொறுமையாக வாங்கலாமே என்று கேட்டபோது, ஒருவர் சொன்னார், ஒருவேளை இருப்பு குறைவாக இருந்து, கடைசியில் இருப்பவருக்கு கிடைக்காமல் போனால், அவருக்கு ஏமாற்றம் தானே! அதனால்தான் எல்லோரும் முந்திக்கொள்ள நினைக்கிறார்கள் என்றார். அவர் சொல்வது சரிதான். ஆனால் இப்படி எல்லாவற்றிற்கும், எல்லோரும் முந்திக்கொள்ள சண்டையிட்டால், சமுதாயத்தில் எப்படி அமைதி நிலவும். கடைசியில் பலமிருப்பவர் மட்டுமே எல்லாம் சாதிப்பாரே!

  • 20 ஆண்டுகளுக்கு முன், ரிலையன்ஸ் நிறுவனம் கைபேசி சேவையை துவங்கியது. அப்போது, சந்தையில் நிறைய நிறுவனங்கள் போட்டியில் இருந்தன. கிட்டத்தட்ட ஓரு கோடி வாடிக்கையாளர் அளவிருந்த சந்தையில், உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கும் என்று அன்றைய தலைவரிடம் கேட்டபோது, அவர் இன்றுள்ள 1 கோடி வாடிக்கையாளர்களைக் காட்டிலும், இன்னும் இந்த சேவை கிடைக்கப்பெறாத மீதமுள்ள 99 கோடி மக்கள்தான் எங்களின் வாடிக்கையாளர் இலக்கு என்று கூறினார். அந்த கனவு, 10-20 ஆண்டுகளில் முழுமையடைந்தது. எல்லோரும் சிறிய சந்தை வாய்ப்பை பார்த்தபோது, அவர்கள் சந்தையில் இன்னும் மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறதென்று நம்பினார்கள்.

பொதுவாக நியாய விலைக் கடையில் அட்டை தாரர்களின் எண்ணிக்கையை பொருத்தே பொருட்கள் இருப்பு வைக்கப்படும். யாருக்கும் இல்லாமல் போக வாய்ப்பு குறைவு. பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எல்லோரும் முறைப்படி வரிசையில் நின்றால், பொருட்களை வழங்கும் அதிகாரியும் எளிதாக வேலை செய்யமுடியும். இருப்பது எல்லோருக்கும் சீக்கிரமாக கிடைக்கும். ஒரு சில சமயங்களில், பற்றாக்குறை ஏற்படலாம். அப்படி ஏற்படும் பற்றாக்குறை தன்னை பாதிக்கக்கூடாது, மற்றவரை பாதித்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு போட்டியிட்டால் சண்டை சச்சரவுகள் மட்டுமே மிஞ்சும். இதே கதைதான் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதிலும் ஏற்படுகிறது. பொதுமக்கள் எங்கெல்லாம் வரிசையில் நின்று வாங்கவேண்டுமோ, அங்கெல்லாம் இந்த பற்றாக்குறை மனநிலையில், தான்மட்டும் சீக்கிரம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போகவேண்டுமென்ற எண்ணத்தில், எல்லா தள்ளுமுள்ளுகளும் நடந்தேறுகின்றன.


நம் இந்தியச் சந்தை, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தை.

  • இங்கு எதுவும் விற்கும்.

  • எவ்வளவு இருந்தாலும் விற்கும்.

  • உங்களுக்கு விற்பதற்கான யுத்திகள் தெரிய வேண்டும்.

  • முதலீடு செய்ய உங்களிடம் போதுமான வளம் இருக்கவேண்டும்.

  • உங்களிடம் செல்வம் இல்லாவிட்டால், முதலீட்டை ஈர்க்கும் வழி தெரிய வேண்டும்;

இந்த எண்ணம் இருந்தால், இதை செயல்படுத்தும் நம்பிக்கை இருந்தால், உங்கள் வெற்றிப்பயனத்தை யாராலும் தடுக்கமுடியாது. இந்த எண்ணத்தை, நம்பிக்கையை திரூபாய் அம்பானி கொண்டிருந்தார். தம்பி தவறவிட்டாலும், அண்ணன் அவரது தந்தையின் கனவை இன்று மெய்படுத்திவிட்டார்.

  • சந்தையில் உங்களுக்கு வாய்ப்பிருக்கிறதென்று நம்புகிறீர்களா!

  • உங்கள் பேச்சுத் திறமையில் வாடிக்கையாளரை வசப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா!

  • இப்போதைக்கு பணம் கையிலில்லாவிட்டாலும், சேர்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கிறதா!

வாய்ப்பிருக்கிறது! முடியும்! ஆக்கப்பூர்வமாக நடக்கும்! என்ற நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருந்தால், உங்கள் வெற்றி வாய்ப்பு தானாக அதிகரிக்கிறது. ஏனெனில், சாத்தியப்படும் என்று எண்ணுகிற மனதால் மட்டுமே, பிரச்சனை ஏற்படும் போது, அதை தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையோடு தீர்வுகளை தேட முடிகிறது. நம்மால் முடியுமா என்று சந்தேகப்படும் மனதிற்கு, ஒவ்வொரு பிரச்சனையிலும் பயம் தான் அதிகரிக்கிறது;


இன்றைய விஞ்ஞான உலகத்தில், நான் கண்டுணர்ந்த யதார்த்தம் யாதெனில்

  • இங்கே எல்லோருக்கும் தேவைப்படும் அளவு போதுமான செல்வமும், வளமும் இருக்கிறது; இருக்கின்ற வளத்தை நம்பிக்கையோடு தேடும் மனம்தான் பற்றாக்குறையாக இருக்கிறது.

  • இங்கு தரித்திரம் இல்லை. நம்மில் பலரிடம் தரித்திர புத்திதான் மிதமிஞ்சி இருக்கிறது.

  • இங்கு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தான்மட்டும் வாழ்ந்தால் போதுமென்கிற சுயநலம்தான் மிகுந்திருக்கிறது

இதை சரிசெய்ய இறைவன் இன்னொரு அவதாரம் எடுத்த வரமாட்டார். ஏனெனில் சரிசெய்ய வேண்டியது நம் ஓவ்வொருவருடைய மனதை, எண்ணத்தை, செயலை.


இங்கு இறைவன் அவதாரமெடுத்து அழிக்க எந்த இராட்சதர்களும் இல்லை. நம் எண்ணங்களை ஆக்கப்பூர்வமாக்க, நம்பிக்கை உடையதாக்க, நம்மைத் தவிர வேறொருவரால் எப்படி முடியும்!


போதுமான அளவு இருக்கிறதென்று நம்புங்கள்!

உங்களால் முடியும் என்று நம்புங்கள்!

சுற்றமும் நட்பும் உதவும் என்று நம்புங்கள்!

சந்தை உங்களை வரவேற்கும் என்று நம்புங்கள்!

உங்களால் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புங்கள்!

எந்த சவாலையும் சந்திக்கமுடியும் என்று நம்புங்கள்!


நம்பிக்கைதான் வாழ்க்கை!

நம்பியவர்கள் மட்டுமே வென்றிருக்கிறார்கள்!

ஆனால் நம்பிக்கை மட்டுமே வெற்றியை தந்துவிடுமா?


“இருக்கிறது”, “முடியும்” என்ற நம்பிக்கையோடு

உங்கள் செயல்பாடுகள் துவங்கினால்

வெற்றிக்கான கதவுகள் தானாய் திறக்கும்!


- [ம.சு.கு 06.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page