top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 330 - வியாபாரமும் சமூக அக்கறையும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-330

வியாபாரமும் சமூக அக்கறையும்...!


  • உலகின் பல முன்னனி நிறுவனங்கள், அடுத்த 10-15 ஆண்டுகளுக்குள், தங்களின் மின்சாரத் தேவை முழுவதையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் [ரினீவபில் எனர்ஜி] சார்ந்ததாக மாற்றி, கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்கப்போவதாக உறுதி எடுத்துள்ளன. இப்படி பெரு நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிக முதலீடு செய்து, மின்சாரத்திற்கான எரிபொருள் தேவையை குறைத்தால், சுற்றுச்சூழல் மாடுபடுவது குறைவதோடு, பூமி வெப்பமயமாவதும் குறையும். இந்த அக்கறையுடன் எல்லா சிறிய நிறுவனங்கள், வீடுகள் இருக்கத் துவங்கினால், பூமியை நம் அடுத்த தலைமுறையினருக்கு, நாம் பத்திரமாய் கொடுக்கலாம்.....

  • சர்வதேச அளவில், ஐநாசபை வியாபார நிறுவனங்களுக்கு நிர்ணயித்துள்ள 10 கட்டளைகளை, உலகம் முழுவதும் செயல்படுத்த முயற்சிக்கின்றது. பல சர்வதேச வியாபார நிறுவனங்கள், சட்டதிட்டங்களுக்கு உட்படுவது, கையூட்டுகளை ஒழிப்பது, ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது, மனித உரிமை காப்பது, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது என்று பல இலக்குகளை நிர்ணயித்து செயல்படுத்துகின்றன. இந்த சமுதாய அக்கறையுடனான இலக்குகள், சொல்லில் மட்டுமல்லாமல், செயலிலும் இருந்தால், நாட்டிலுள்ள எல்லா நிறுவனங்களிடமும் இந்த இலக்கும் செயல்பாடும் இருந்தால், நாட்டின் தலைவர்கள், அரசு ஊழியர்கள் அனைவரிடமும் இந்த அக்கறை இருந்தால், நாம் வாழும் சமுதாயம் எவ்வளவு அழகானதாகவும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அமைதியானதுமாக இருக்கும். நம்முடைய இந்த கனவு சமுதாயம் சீக்கிரத்தில் வந்துவிடுமா?

எல்லாவகைகளிலும், இன்றைய பூமியானது, 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட, அதிக வெப்பம் அடைந்து, வாழ்வதற்கேற்ற இடம் என்ற தகுதியிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத மாசுபடுதலினால், குடீநீர் துவங்கி, எல்லாமே மாசுபட்டு, அன்றாட உயிர்வாழ்தலுக்கு தேவையான காற்றைக் கூட காசுகொடுத்த வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த மாசுபடுதலுக்கு வியாபார நிறுவனங்கள்தான் காரணம் என்று போராட்டங்கள் நடக்கின்றன. இலாபத்தை மட்டும் குறியாக கொண்டு, உற்பத்தியை பெருக்கும் முயற்சியில், அவர்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு, சட்டவிதி மீறல்கள், சமுதாய நலனை முற்றிலும் கேள்விக்குறியாக்கி விடுகிறது. இப்படி உங்கள் வியாபாரம் என்னென்ன விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறதென்று கவனியுங்கள்.

  • வியாபார நிறுவனங்கள் இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக சுறண்டுவதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் யாரை பாதிக்கின்றன?

  • தொழிற்சாலைகளின் உற்பத்திப் பெருக்கத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு யாரை பாதிக்கிறது?

  • பணியில் ஆண்-பெண் பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள், பிரிவிணைகள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

  • தரமான பொருட்களை நீண்டகாலம் வைத்து பயன்படுத்துவற்கும், தரமற்ற பொருட்களை விலைமலிவாக வாங்கி ஓரிரு முறை உபயோகத்துவிட்டு தூக்கி எறிவதனால் ஏற்படும் வளங்களின் இழப்பும், கழிவுகளின் சேர்க்கையும் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

  • வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களின் சுயநலன்களுக்காக அரசு இயந்திரங்களை, கையூட்டிளின் மூலம் வளைக்க முயற்சிப்பதும், பொது சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாலும் ஏற்படும் சட்ட குழறுபடிகள் என்ன?

இவையணைத்தும், வியாபார நோக்கோடு, அதிக இலாபம் ஈட்டும் நோக்கோடு, உலகெங்கும் இயங்கும் சிறுதொழில் முதல் பெரு நிறுவனங்கள் வரை எல்லோரும் கூட்டாய் ஏற்படுத்தும் சமுதாய சீரழிவுகளுக்கான தாக்குதல்கள். இவற்றில் உங்கள் பங்கு தாக்குதல்கள் என்னென்ன? உங்கள் நிறுவனம் என்னமாதிரியான மாசுபாட்டை, சமுதாய சீரழிவை செய்துகொண்டிருக்கிறது?


எல்லா நிறுவனங்களும் இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. அரசாங்கங்களும் எந்த தடையும் விதிக்கவில்லை. இவற்றை தொடர்வதில் என்ன தவறென்று ஒருசிலர் வாதிடுகிறார்கள். ஒரு நிமிடம் யோசியுங்கள் – மனிதர்களுக்கு இந்த பூமியை விட்டால் வேறெதாவது வாழ்விடம் இருக்கிறதா? போக்கிடம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்தபின்னும், நாம் வாழும் சமுதாயத்தை, சுற்றுச்சூழலை மேம்படுத்தாமல், சீரழிப்பது நமக்குநாமே குழிபறிப்பது போலத்தானே!!


இன்றைய தலைமுறை நிறுவனங்கள், கீழ்கண்ட உறுதிமொழிகளை காகிதங்களில் மட்டுமல்லாமல், களத்திலும் முழுமனதோடு செயல்படுத்தினால், பூமியில் மனித இனம் நீண்ட நாட்கள் வாழ வழியிருக்கும்;

  • கூடுமானவரை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவது

  • கூடுமானவரை கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது;

  • கூடுமானவரை ஒருமுறை பயன்படுத்தி வீசுகின்ற நெகிழிகளை முற்றிலும் களைவது;

  • எல்லா மனிதர்களையும், ஊழியர்களையும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்துவது;

  • எல்லா சந்தர்ப்பங்களிலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயலாற்றுவது;

  • இலாபமா? தரமா? என்ற கேள்வி எழும்போது, இலாபத்தைக் காட்டிலும் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது;

  • எல்லா பொருட்களிலும் போதுமான பாதுகாப்பு முறைமைகளை உறுதி செய்வது;

  • போலியான விளம்பரங்களை தவிர்த்து உண்மையை உள்ளபடி சொல்லி விளம்பரம் செய்வது;

  • தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மட்டுமே எதையும் செய்யாமல், எல்லாவற்றிலும் சமதாய நலனையும் சேர்த்து கவனிப்பது;

இவையெல்லாம், வியாபார நிறுவனங்களுக்கான அறிவரைகளல்ல, அவர்களாகவே சமுதாய அக்கறையுடன் உணர்ந்து செயல்படுத்த வேண்டிய சில யோசனைகள் மட்டுமே! வியாபாரமும், வாடிக்கையாளர்களும் முனைப்புடன் உணர்ந்து செயல்பட்டால், பூமி பாலைநிலமாகாமல், என்றென்றைக்கும் உயிரிணங்கள் வாழ ஏற்ற இடமாக, எல்லா உயிரிணங்களையும் அரவணைக்கும் சொர்க்கமாக இருந்து கொண்டிருக்கும்!


உங்கள் வியாபாரம் என்றென்றும் செழிக்க – அவை

போதுமான சமூக அக்கறையுடன் செயல்படுகிறதா?

சமூகத்தைப்பற்றி கவலைப்படாத வியாபாரங்கள்

சீக்கிரத்தில் வாடிக்கையாளர்ளாலும் ஒதுக்கப்பட்டு விடுகிறது;


குறுகிய கால நோக்குடன் செயல்பட்டு வீழ்வது உங்கள் நோக்கமா?


நீண்டகால நோக்குடன், சமுதாய அக்கறையுடன் உங்கள் வியாபாரம்

தலைமுறைக்கும் நீடித்திருக்கச் செய்வது உங்கள் ஆசையா?

உங்களுக்கான பாதையை நீங்களே தேர்வுசெய்யுங்கள்!!



- [ம.சு.கு 04.09.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page