top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 308 - மேலாண்மையா? அனுசரிப்பா? கீழ்படிதலா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-308

மேலாண்மையா? அனுசரிப்பா? கீழ்படிதலா?.."


  • ஒரு நிறுவனம், புதியதொரு வீட்டு உபயோகப்பொருளை அறிமுகப்படுத்த நாள்குறித்தது. சிறந்த புதிய கண்டுபிடிப்பாக இருப்பதால், பெரிய வரவேற்பை பெறுமென எதிர்பார்த்து, எல்லா திட்டமிடலையும் செய்திருந்தது. அதன் மூலப்பொருட்கள் அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு தடங்கல் இல்லாமல் கிடைக்கச்செய்வது முதல், அதன் உற்பத்தி முறைமையை படிப்படியாக தானியங்கி ஆக்குவது வரை எல்லாவற்றையும், உரிய மேலாளர்களை வைத்து அதன் முழுசக்கரத்தையும் திட்டமிட்டிருந்தது. மேலாண்மையில் பெயர் பெற்ற அந்த நிறுவனம் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்க, அறிமுகப்படுத்த வேண்டிய நாட்கள் நெறுங்கும்போது, நாட்டில் ஏற்பட்ட அரசியில் நெறுக்கடிகளால், அதன் தேதியை ஒருமாதம் தள்ளிப்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன்பின் ஒவ்வொன்றாக கைமீறியது. 2-3 மாதங்களில் அதன் காப்புரிமை செய்யப்பட்ட உற்பத்தி இரகசியங்கள் திருடப்பட்டு 4-வது மாதத்தில் போலித் தயாரிப்புகள் சந்தையில் குவிந்தன. பெரிய முதலீட்டில் புகுத்தப்பட்ட சாதனம், பாதியளவு இலாபம் கூட இல்லாமல் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது....

  • மிகச்சிறந்த மல்யுத்த வீரர், அன்றாட உறக்கம், உணவு, பயிற்சி என்று எல்லாவற்றிலும் ஒரு முறைமை வகுத்து சிறப்பாக தன்னை மேலாண்மை செய்துவந்தார். அவரது கட்டுப்பாடான முறைமை, பல வெற்றிகளை அவருக்கு தேடித்தந்தது. காலப்போக்கில் உடல்வலிமை குன்றி, போட்டியாளராக இருந்தவர், பயிற்சியாளராக இடம்மாறினார். சீக்கிரத்திலேயே இருதய இரத்தகுழாய் அடைப்பு காரணமாக எல்லாவற்றிலும் இருந்துவிலகி விடவேண்டிய கட்டாயம் வந்தது. இதய மாற்று அறுவைசிகிச்சை செய்து 3 ஆண்டுகாலம், தாக்குப்பிடித்து இறுதி ஊர்வலம் போனார். இப்படி நடப்பதுதான் வாழ்வின் யதார்த்தம் என்பது எல்லோருக்கும் தெரியுமே! இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறதென்று நீங்கள் கேட்கலாம்? இந்த இயற்கையை எப்போது புரிந்துகொள்கிறீர்கள் என்பதுதான் இங்கிருக்கும் சூட்சமம்.

என்னதான் நேர்த்தியாக திட்டமிட்டாலும், செயல்பாடு என்று வரும்போது, பல நபர்களின் பங்களிப்பில் அது எதிர்பார்த்த விதம் நடப்பது முழுமையாக உங்கள் கையில் இல்லை. ஆரம்பத்தில் எல்லாவற்றையும் கூடியவரை முழுமையாக திட்டமிட்டு மேலாண்மை செய்ய முயற்சிக்கிறார்கள். திட்டமிடும் காலத்தில் எல்லாம் சரியாக இருக்கும் என்ற மாயை இருக்கிறது. அவை அடத்தகட்ட செயல்பாட்டிற்கு வரும்போது, ஆங்காங்கே சிறிதும்-பெரிதுமாய் சிக்கல்கள் வருகின்றன. ஒருசிலவற்றை ஊதித்தள்ளுகிறீர்கள். பலவற்றை சமாளிக்கிறீர்கள். தொடர்கின்ற பயனத்தில் ஒருநாள் இயற்கை சூரவளியை [புயல், கோவிட், விபத்து......] களமிறக்கும்போது, உங்கள் கைகளில் செய்வதற்கு ஒன்றுமிருக்காது. அவற்றை அனுசரிக்க உங்களுக்கு நேரமுமிருக்காது. சூராவளியின் முன் கீழ்படிவதைத்தவிர வேறுவழி இருக்காது. ஒவ்வொரு பொருளுக்கும், செயலுக்குமான இயற்கைவிதி இது. உங்கள் மேலாண்மையில் தொடங்கி, அனுசரிப்பில் பயனித்து இறுதியில் இயற்கையிடன் கீழ்படிவதுதான் எழுதப்படாத, மாற்றமுடியாத விதி.


இந்த இயற்கை விதி, பொருள்களுக்கு மட்டுமானது அல்ல. மனிதவாழ்வின் நியதியும் இதுதான். ஆரம்பத்தில், இரத்தம் ஊறுகின்ற வயதில் எல்லாவற்றையும் உங்களால் மேலாண்மை செய்யமுடிவது போன்ற மாயை இருக்கும். வயது 50-ஐ கடக்கும்போது, வலுவும்-ஆற்றலும் படிப்படியாக குறையும். அதைப்புரிந்து உதவியாளர்களைக் கொண்டு அனுசரித்து சமாளிப்பீர்கள். ஆனால் திடீரென்று ஏதேனுமொரு உறுப்புக்கோளாறு ஏற்படும்போது, இவையெதுவும் வேலைசெய்யாது. மருத்துவர் அதையகற்றி மாற்றவேண்டுமென்றால், அவர் ஆலோசனைக்கு அடிபணிவதை விட வேறுவழியிருக்காது. அடுத்தகட்டமாக நோய்களின் தீவரமும், வயோதிகத்தின் இயலாமையும் முற்றும்போது. உங்கள் இறுதிநாளுக்கு அடிபணிவதை அந்த மருத்துவராலும் தடுக்க முடியாது. இங்கு எல்லாமே மேலாண்மையில் துவங்கி, அடிபணிதலில் முடிவது தான் வேதம் சொல்லாத விதி.

  • நீங்கள் புதிதாய் பணியில் சேர்ந்திருப்பீர்கள். அங்கு உங்களால் நிர்வகிக்க முடிவது எது? அனுசரித்து போகவேண்டியது எது? கீழ்படிய வேண்டியது எது? என்ற தெளிவை ஏற்படுத்திக்கொண்டால், வேலையில் பிரச்சனையில்லாமல், பயனிக்க முடியும். அடிபணிய வேண்டிய இடத்தில் மேலாண்மை செய்ய முயற்சித்தால், வில்லங்கங்கள்தான் உருவாகும்!!

  • உங்கள் இல்லறத்தில் எல்லாவற்றையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் துணைக்கு நீங்கள் நிறைய அறிவுரை கூறலாம். ஆனால் யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை அனுசரித்தோ, அடபணிந்தோ போனால் தான், இல்லறம் நல்லறமாகும். இல்லாவிட்டால், நீதிமன்றங்களில் வரிசைகாக்க வேண்டியதுதான்;

  • உங்கள் வியாபாரத்தில் புதிய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உங்கள் இழுப்பிற்கு ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் வருவார்கள். உங்களுக்காக காத்திருந்து வாங்கிச் செல்வார்கள். சீக்கிரத்தில் போட்டியாளர்களின் பொருட்கள் சந்தைக்கு வரும்போது, நீங்கள் வாடிக்கையாளர்களை தேடிச்செல்ல நேரிடும். உங்கள் பொருட்களைவிட மேம்பட்டவை சந்தைக்குவந்தால், நீங்களும் உங்கள் பொருட்களை மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தயவுதாட்சன்யமின்றி சீக்கிரத்தில் ஒதுக்கப்படுவீர்கள். நீங்கள் மேலாண்மை செய்த சந்தை, உங்களை ஒருநாள் அடிபணியச் செய்து விரட்டிவிடும்!!

உங்கள் ஊழியர்களை நம்பி ஆயிரம் திட்டமிடலாம். பலசமயங்களில் அவை திட்டமிட்டவாறு, ஒருசில மாற்றங்களுடன் நடந்தேறலாம். சில நேரங்களில், உங்கள் ஊழியர்கள் தவறு, உங்களை பெரிய சிக்கலில் சிக்கவிடக்கூடும். இன்னும் சிலதவறுகள், உங்களை வேரோடு சாய்த்துவிடக்கூடும். என்னதான் சிறந்த மேலாண்மை செய்தாலும், சில சரிவுகள் தவிர்க்கமுடியாதவை. அந்த சரிவுகள் உங்களை முற்றிலும் சாய்த்துவிடாத வண்ணம் ஏதாவது மாற்று உபாயங்களை நீங்கள் செய்துகொள்ள வேண்டியது உங்கள் சாமர்த்தியம். அதுவும் ஒரு எல்லைவரைதான் என்பது ஞாபகமிருக்கட்டும்;


படைத்தல், காத்தில், அழித்தல் என்ற முத்தொழிலையும் நிர்வகிப்பது மேலாண்மை. உயிர்களைத் தவிர்த்து ஏனைய பொருட்களில் மனித இனம் இதை திறம்பட செய்கிறது. ஆனால் இறுதியில் பரம்பொருள் வெல்கிறதென்பது தவிர்க்கமுடியாத உண்மை. ஆனால் முடியும்வரை மேலாண்மையையும், அனுசரிப்பையும் திறம்பட செய்து முன்னேற்றம் காண்பதுதான் நமக்கான வேலை. எங்கும், எதிலும் அகங்காரத்துடன் ஆடாமல், அடிபணியும் இறுதிநாளை மனதில்வைத்து முன்னேற்றத்திற்காக பயனிப்போம்!!


அன்றாட வாழ்வில்

எதை மேலாண்மை செய்கிறீர்கள்?

எதை அனுசரித்து போகிறீகள்?

எதற்கு கீழ்படிந்து அடங்குகிறீர்கள்?


இங்கு எல்லாமே கட்டுப்படுவதுபோல தோன்றும் – ஆனால்

எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்பதுதான் நிதர்சனம்;

நீங்கள் மேலாண்மை என்று கருதுவது ஒரு அனுசரிப்புதான்!

நீங்கள் அனுசரிப்பதென்று கருதுவது ஒரு அடிபணிதல்தான்!


மேலாண்மை, அனுசரிப்பு, கீழ்படிதல் மூன்றையும் கீதாசாரத்துடன்

பொருத்தி முழுமையாய் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்!

இப்போது புரியவில்லை என்றால்

இன்னும் அனுபவம் கூடியபின் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள!

அது புரிவதுதான், உங்களின் உண்மையான முதிர்ச்சி!!


- [ம.சு.கு 13.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page