“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-279
ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்று பயமா?
பொதுவாக பயிலறங்குகள், கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், பயிற்சி வகுப்புகள் போன்ற நிகழ்வுகளின் முடிவில், அந்த நிகழ்ச்சி குறித்த தங்களின் கருத்துக்களை பங்கேற்பாளர்களிடம் பார்வையாளர்களிடம் கேட்பார்கள். ஒலிவாங்கியை [மைக்] கூட்டத்தினர் மத்தியில் கொடுத்து கருத்துக்களை எழுந்துநின்று சொல்லுமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். எவ்வளவுதான் கேட்டாலும், ஓரிருவர் மட்டுமே அவர்களாக எழுந்து கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஒருசிலர் கட்டாயப்படுத்தி கேட்டால்மட்டுமே பேசுவார்கள். அதுவும் நன்றாக இருந்தது, பயனுள்ளதாக இருந்ததென்று சில வார்த்தைகளில் முடித்துக்கொள்வர். அந்த நிகழ்ச்சி எவ்வளவு மோசமானதாக இருந்திருந்தாலும், பெரும்பாலும் நன்றாக இருந்ததென்று சொல்லிவிடுவார்கள். ஏன் நிகழ்ச்சி குறித்த கருத்தை, விமர்சனத்தை கேட்டாலும், மக்கள் வெளிப்படையாக சொல்வதில்லை? அந்தமாதிரி ஏதேனும் நிகழ்வில் நீங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லியிருக்குறீர்களா?
குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அவர்கள் தேர்வு செய்யும் ஆடை, ஆபரணங்கள் எவ்வாறு முடிவு செய்யப்படுகின்றன என்று யோசித்துப்பாருங்கள். அன்றைய காலபோக்கிற்கு ஏற்ப மக்கள் தேர்வு செய்வார்கள். அவர்களுக்கு எந்த உடை வசதியாக இருக்கும் என்கிற விடயத்தைவிட, அன்றைய போக்கிற்கு ஏற்ப ஆடைகளை தேர்வுசெய்கின்றனர். தன்னைச் கூட்டத்தினர் மத்தியில், தான்மட்டும் மாறுபட்டுவிடக்கூடாதென்று கவனமாக தேர்வு செய்கிறார்கள். அதேபோல, எந்த நிகழ்ச்சிக்கு எந்த மாதிரி உடை அணிந்து போக வேண்டுமென்று தேர்வு செய்வதிலும் கூட்டத்தினரின் போக்கையே பெரும்பாலும் கடைபிடிக்கின்றனர். இந்தமாதிரி இடங்களுக்கு வேஷ்டி-சட்டை, சேலைதான் கட்டவேண்டும், இங்கு மேற்கத்திய உடைகள் தான் என்று கூட்டத்தின் பானியை கண்மூடித்தனமாய் பின்பற்றுகின்றனர். ஏன் என்று கேட்டால், “எல்லாரையும் போல நாமும் இருப்போம், நாம் மட்டும் எதற்குத் தனியாய் தெரிய வேண்டும்” என்று சொல்கின்றனர். எங்கே கூட்டத்தினர் தங்களை மட்டும் வேறுபடுத்திவிடுவார்களோ என்ற பயம், அவர்களின் அன்றாட தேர்வுகளை பெரியளவில் கட்டுப்படுத்துகிறது.
கூட்டத்தினர் மத்தியில், ஏதேனுமொரு கருத்தை, விமர்சனத்தை எழுந்துநின்று சொல்லச் சொன்னால், பொதுவாக எல்லோரும், அந்த நிகழ்வு நன்றாக இருந்ததென்று சுருக்கமாக சொல்லி, அதிலிருந்த குற்றம் குறைகளை சுட்டிக்காட்டாமல் தவிர்க்கின்றனர். அதே நபர், தங்கள் அருகில் அமர்ந்திருந்த நண்பனிடம், இது சரியில்லை, அது சரியில்லை என்று பெரிய பட்டியலே போட்டிருப்பார். ஆனால் கூட்டத்தின் மத்தியில் கருத்து கூறுமாறு கேட்டால், அதை சொல்வதில்லை. எங்கே கூட்டம் தன்னை ஒதுக்கிவிடுமோ? தன்னுடைய விமர்சனத்தையே விமர்சித்து விடுவார்களோ? தன்னுனைய கருத்துக்கள், விமர்சனங்கள் கேளிக்கூத்தாகி விடுமோ? என்று பயம் அவர்களை ஆக்கிரமித்துவிடுகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள் எங்கெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதென்று ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள்!
ஆடை ஆபரணங்கள் தேர்வு, நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும், எதை வீட்டில் வைக்கவேண்டும், வைக்கக்கூடாது, எங்கு எப்படி போய்வர வேண்டும், யார்யாருடன் பேசலாம், யாருடன் பேசக்கூடாது, என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது, என்று எண்ணற்ற விடயங்களில் உங்களின் தேர்வு எப்படி நிர்ணயமாகிறதென்று யோசித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த முறையில் தேர்வுசெய்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் செய்கின்றவிதங்களுக்கு ஒத்துப்போகும் விதத்தில் உங்கள் தேர்வுகளை அமைத்துக் கொள்கிறீர்களா?
இந்த சமுதாயம் எண்ணற்ற எழுதப்படாத விதிகளை கட்டமைத்திருக்கிறது. காலப்போக்கில் அவை மூடப்பழக்கங்களாகிவிட்டன. நூறாண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட விதம், அன்றைய காலத்திற்கு ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றும் அதை அப்படியே செய்வது முட்டாள்தனம் என்று தெரிந்தும் பல பேர் திரும்பத்திரும்ப செய்கிறார்கள். எங்கே தான் மாற்றிச் செய்தால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்று பயம். தவறென்றும், பொருந்ததென்றும் தெரிந்திருந்தும், அப்படி எண்ணற்ற முட்டாள்தனங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இவைகளை மாற்ற எல்லா நேரங்களிலும் பெரியாரால் வரமுடியுமா?
கலைகளில் நாட்டமுடைய மாணவன், இந்த சமுதாயத்தின் போக்கையும், குடும்பம் மற்றும் உறவுகளின் கட்டாயத்தையும் ஏற்றுக்கொண்டு தனக்கு விருப்பமில்லாத பாடத்தை தேர்வுசெய்து படிக்கின்றான்;
கல்லூரி நண்பர்கள் மத்தியில், எங்கே அவர்கள் இவனை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயத்தில், அவர்களின் கட்டாயத்திற்காக புகைபிடித்தல், மதுபழக்கங்களை ஆரம்பிக்கின்றான்;
ஜாதி, மத பிரிவனைகளில் உடன்பாடில்லாவிட்டாலும், தன் குடும்பம், உறவுகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயத்தில், அந்த பிரிவனை சாக்கடையில் உழல்கின்றான்;
பணிபுரியும் இடங்களில், சக ஊழியர்கள் என்ன செய்கிறார்களோ, அதேயே தானும் செய்து கொண்டு வெறுமனே காலத்தை கடுத்துகிறான்;
எங்கு, யாரைப்பற்றி, எந்த கருத்து கேட்டாலும் தனிமையில் நிறைய பேசுபவன், கூட்டத்தின் மத்தியில் நன்றென்று ஓரேவார்த்தையில் முடித்துவிடுகிறான்;
ஏன் கூட்டத்தினர் மத்தியில் இத்தனை பயம்? சமுதாயம் தன்னை ஒதுக்கிவிடுமோ என்று எதற்கா பயந்து ஒழிய வேண்டும்? சரியானதைச் சொல்லாமல் விட்டால் தவறுகள் நடுந்துகொண்டேதான் இருக்கும். அந்த தவறு உங்களோடு சேர்த்து எல்லோரையும் பாதிக்கும். இந்த பாதிப்பு வரும் என்று தெரிந்திருந்தும், நமக்கெதுக்கு வம்பு என்று பொருப்பில்லாமல் ஏன் விடுகிறீர்கள்? சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து எதற்காக ஒதுங்கிச் செல்கிறீர்கள். உண்மையில், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் உங்களைப்போலத்தான் எல்லாம் தெரிந்திருந்தும், கூட்டம் என்ன சொல்லுமோ என்று பயந்து விலகி விடுகின்றனர். பல இடங்களில், யார் முதலில் சொல்வது என்ற தயக்கம் தான்.
மேடையேறிப் பேச பயப்படாதீர்கள்
கீழே அமர்ந்திருப்பவர்கள் யாரும்
உங்களை விட அதிபுத்திசாலிகள் இல்லை!
உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை
கேட்கப்படும் இடங்களில் தெரிவிக்க பயப்படாதீர்கள்;
அவர்கள் கேட்பதே அவற்றை தெரிந்து சரிசெய்யத்தான்!
உடையோ, கலாச்சாரமோ, பழக்கவழக்கமோ,
சமுதாயத்தின் போக்கில் மூடப்பழக்கங்களை தொடராதீர்கள்;
எது சரியோ, அதை நீங்கள் முன்னெடுத்துச் செய்தால்,
இந்த சமுதாயம் உங்களை ஏற்று பின்தொடரும்!
- [ம.சு.கு 15.07.2023]
Commenti