top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 249 - எப்போதும் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்!"

Updated: Jun 16, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-249

எப்போதும் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்!


  • 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி இரவு உறக்கம் ஒரு ஊருக்கே நிரந்த உறக்கமாகி போனது. மத்திய பிரதேஷம், போபால் நகரில் இயங்கி வந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், மிதைல் ஐசோசைனேட் எனும் விஷவாயு, பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக கசிந்தது, கிட்டத்தட்ட பத்தாயிரம் அப்பாவி மக்களை ஒரே இரவில் காவு வாங்கியதோடு, எண்ணற்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திய கதையை எல்லோரும் படித்திருப்பீர்கள். உலகவரலாற்றில், ஏற்பட்ட மிகப்பெரிய தொழிற்சாலை விபத்துக்களில் ஒன்றாக கருதப்படும் இது, பாதுகாப்பு குறைபாட்டாலும், மனிதத் தவறுகளாலும், அஜாக்கிரதையினாலும் ஏற்பட்டதென்பது நெஞ்சை பதறவைக்கும் உண்மை.

  • வீட்டில் நகைகளை வைக்க எத்தனை பாதுகாப்பு செய்கிறீர்கள். வெளியூர் செல்லும்போது, அலமாரியை பூட்டி, அந்த அறையை பூட்டி, வீட்டின் கதவைபூட்டி பல அடுக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதேபோல வங்கிகள், பணம் வைக்கும் கருவூலத்தை 4-5 கட்ட பாதுகாப்புக்களுடனும், அபாய மணிஒலிக்கும் விதத்திலும் கட்டமைக்கிறார்கள். எதற்கு இத்தனை அடுக்கு பாதுகாப்பு என்று யோசித்திருக்கிறீர்களா?

தொழிற்சாலைகளில் கையாளப்படும் பொருட்களின் தன்மை, மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களுக்கேற்ப, அவை பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று பிரிக்கப்பட்டு, அரசாங்கம் எண்ணற்ற பாதுகாப்பு கட்டுப்பாடுகளை சட்டங்களாக வகுத்திருக்கிறது. அவற்றை அவ்வப்போது பரிசோதித்து உறுதி செய்யவும் கட்டாய விதிகள் இருக்கின்றன. அப்படி கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து, குறைபாடுகளை சரி செய்ய ஒரு தனித்துறையே இயங்குகிறது. எல்லா சட்டங்களும், பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தும், அரசாங்கமும், தொழிற்சாலை நிர்வாகமும் காட்டிய மெத்தனப்போக்கும், அஜாக்கிரதையும் ஒரு பேரழிவை கொடுத்தது. இந்த விபத்து நம் தேசத்திற்கே ஒரு பெரிய பாடம் தான். இன்றும் அப்படி மெத்தனப் போக்கில் எத்தனை தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்று அலசிப்பாருங்கள்!


பிரதம மந்திரி, ஜனாதிபதிக்கு கொடுக்கபடுவது போல, பல அடுக்கு பாதுகாப்பை நம் செலவத்தை சேமிக்கும் கருவூலங்களுக்கு கொடுக்கிறோம். ஏனெனில், ஒருவேளை திருடன் புகுந்தால், இவை எல்லாவற்றையும் உடைத்து எடுக்க அதிக நேரம் எடுக்கும், அதற்குள் எதாவதொரு சத்தம் வந்தாலும் அக்கம்பக்கத்தினர் விழித்துக்கொள்வார்கள் என்று திட்டமிட்டு பல அடுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம். ஒரு சிலவற்றில் தப்பித்தாலும், ஏதேனுமொன்றில் மாட்டிக்கொள்ளும் விதத்தில் பாதுகாப்பு கட்டமைக்கப்படும். இதையும் தாண்டி சாமர்த்தியமாக திருடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். யதார்த்தத்தில், இந்த அடிப்படை பாதுகாப்பு கட்டமைப்பு, பல சின்னசின்ன திருட்டுக்களை முற்றிலுமாக தடுக்கிறது.


நீங்கள் வெறுமனே மேசை மேல் பணத்தையும், நகையையும் வைத்துவிட்டு போனால், திருடன் எளிதாக ஜன்னல் வழியில் குச்சியை விட்டு எடுத்துக்கொண்டு போய்விடுவான். வங்கியில் காசாளர் அறையை கூடதல் பாதுகாப்பிற்குரியதாகவே கட்டமைத்திருப்பார்கள். அடிப்படையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது ஒவ்வொருவரது கடமை. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் விட்டால், கொலை, கொள்ளை, விபத்துக்கள் சாதாரணமாக நிகழ வாய்ப்பாகிவிடும். அதனால் தான், ஒரு திருவிழா வந்தாலும், பொதுகூட்டமானாலும், காவல் துறையினர் எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கின்றனர்.


வீடோ, தொழிற்சாலையோ, சமுதாய கட்டமைப்போ, ஒருவேளை போதுமான பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தப்படாமல் இருந்தால், என்ன விபரீதம் நடக்கும்?

  • இயந்திரங்கள் சீராக பராமரிக்கப்படாவிட்டால், கட்டாயமொரு நாள் விபத்து ஏற்படும்; அதனால் தான், பல தொழிற்சாலைகளில் திட்டமிட்ட முன்கூட்டிய பாதுகாப்பு முறைகளை கட்டாயமாக அமல் படுத்திக் கொண்டிருக்கின்றனர்;

  • வீடுகளிலும், தொழிற்கூடங்களிலும் பொருட்கள் திருட்டு போவதை தடுக்க முடியாமல் போகிவிடும்;

  • காவல் துறையின் பாதுகாப்பு குறைகளினால், ஆங்காங்கே கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரித்துவிடும்;

  • மக்கள் ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்வதும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும், இயற்கை வளங்களை சுரண்டுவதும், பிற உயிரனங்களை துன்புறுத்துவதும் அதிகரித்துவிடும்;

எப்போதும் பாதுகாப்பு ஒரு கடினமான பணிதான். ஏனெனில் திருடன் எப்படி வருவான், என்ன விபத்து நேரக்கூடும் என்று பல சாத்தியக்கூறுகை யோசித்து, எல்லாவற்றையும் சமாளிக்கும் விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டமைக்க வேண்டும். அப்படி பல அடுக்கு பாதுகாப்பு போட எண்ணற்ற பொருட் செலவாகும். அந்த செலவுகளை கருத்தில் கொண்டு, ஒரு சிலவற்றை செய்யாமல் விட்டால், விபத்து நேரும்போது, இழப்புக்களை தடுக்கமுடியாமல் போகும்.


சிறிய விபத்தாக முடியவேண்டிய சில நிகழ்வுகள், போதுமான பாதுகாப்பின்மையின் காரணமாக, பெரிய அளவு பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. உங்கள் பிறப்பு முதல், மரணம் வரை, உங்களைச் சுற்றிய பாதுகாப்பு கட்டமைப்புதான், உங்கள் வாழ்க்கை சீராக போவதற்கான அடிப்படைத் தேவை.

  • உங்கள் குழந்தைப் பருவத்தில், பெற்றோர்கள் உங்கள் பாதுகாப்பை கவனித்துக்கொள்கிறார்கள்;

  • பள்ளியில் உங்கள் பாதுகாப்பை ஆசிரியர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்.

  • சமுதாயத்தில் பாதுகாப்பை, அரசாங்கம் பல சட்ட விதிகளை நிர்ணயித்தும், அவற்றை கவனிக்க அதிகாரிகளை நியமித்தும் உறுதி செய்கிறது;

நடைமுறையில், போதுமான பாதுகாப்புமுறைகள் உங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வளர்கின்ற வரை, மற்றவர்கள் உங்கள் பாதுகாப்பை பார்த்துக்கொள்கிறார்கள். வளர்ந்தபின், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

  • உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு என்ன செய்கிறீர்கள்?

  • உங்கள் செல்வத்தை பாதுகாக்க என்ன மாதிரியான முதலீடுகளை செய்கிறீர்கள்?

  • உங்கள் ஊழியர்களை பாதுகாக்க, என்ன முன்னேற்பாடுகளை உங்கள் நிறுவனத்தில் கட்டமைக்கிறீர்கள்?

  • பெண்களுக்கான, குழந்தைகளுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்கிறீர்கள்?

  • நீங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தை எப்படி உறுதி செய்கிறீர்கள்?

  • உங்கள் வாடிக்கையாளருக்கு நீங்கள் கொடுக்கும் பொருட்கள் போதுமான பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக இருக்க என்ன செய்கிறீர்கள்?

  • இயந்திரக் கோளாறுகள், மனிதத்தவறுகள் ஏற்படாமல் இருக்க என்ன பாதுகாப்பு முறைகளை கட்டமைத்துள்ளீர்கள்?

  • ஒரு வேலை இயற்கை சீற்றங்களோ, தற்செயலான விபத்துக்களோ ஏற்பட்டால், அவற்றை கையாள எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை, ஊழியர்கான பயிற்சிகளை கொடுத்திருக்கிறீர்கள்?

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கேள்விக்கும் உங்கள் பதில்களை நீங்கள் யோசியுங்கள். ஒருமுறை மட்டுமல்ல! தொடர்ந்து இவற்றை நீங்கள் பரிசோதித்தும், ஊழியர்களுக்கு பயிற்சித்தும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும்; ஏனெனில், உங்களை நம்பிய உங்கள் குடும்பத்தினருக்கும், ஊழியருக்கும், வாடிக்கையாளருக்கும் நீங்கள்தானே கடவுள்!!


நிறைய உழைத்து பொருள் சேர்க்கிறோம்

ஒரு வேளை அதை பத்திரமாக வைத்துக்கொள்ள

வழியேதுமில்லை என்றால்,

அந்த செல்வத்தை சம்பாதிப்பதில் என்ன பயன்?


உங்களை நம்பி குடும்பத்தினர், வீட்டில்

உங்களை நம்பி ஊழியர்கள், தொழிற்கூடத்தில்

உங்கள் பாதுகாப்பை நீங்கள் பார்த்துக்கொள்வது ஒருபுறமிருக்க

உங்களை நம்பியவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்கிறீர்கள்?


எல்லாவற்றிற்கும் ஒரு பாதுகாப்பு வலையத்தை

நீங்கள் தொடர்ந்து உறுவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்;

நீங்கள் சாதிக்காவிட்டாலும்

இருப்பதை தக்கவைக்க, பாதுகாத்துக்கொண்டே இருங்கள்;


- [ம.சு.கு 15.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page