“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-222
புதிய கோணத்தில் தீர்வு காணுங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன்னால், உற்பத்தி முறைகளை இயந்திரமயமாக்கி வந்த ஒரு சோப்பு (சவுக்காரம்) தயாரிக்கும் நிறுவனத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்தது. ஒரு சில சோப்பு பெட்டிகள் காலியாக இருப்பதாக வந்த புகார்தான் பிரச்சனை. எப்படி இயந்திரத்திலிருந்து தவறுதலாக வரும் காலிபெட்டிகளை கண்டுபிடித்து வாடிக்கையாளருக்கு செல்லாமல் அகற்றுவதென்று ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு பொறியாளரும் நிறைய வருடல் நுட்பங்கள் [ஸ்கேனிங்], எடை சோதனைமுறை என பல்வேறு யோசனைகளை பரிசோதித்தார்கள். ஆனால் முற்றிலுமாக அந்த பிரச்சனை தீரவில்லை. நிறுவனம் அந்த பிரச்சனைகளை தீர்க்க சில கூடுதல் முதலீடுகளைக்கூட செய்ய தயாராக இருந்த சமயத்தில், ஒரு கடைநிலை ஊழியர் சர்வசாதாரணமாக ஒரு பெரிய காற்றாடியைக் கொண்டு அந்த பிரச்சனையை தீர்த்துவைத்தார். எப்படி?
பழைய தெனாலிராமன் கதைஒன்று – ஒரு பெரியவர் 17 யானைகளை தன் முன்று பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு இறந்துபோனார். அந்த 17 யானைகளை முறையே ½, 1/3 & 1/9 பங்காக வைத்துக்கொள்ள வேண்டுமென்று விதி விதித்திருந்தார். அந்த 17 யானைகளில் பாதி ½ என்பது 8½. எப்படி யானையை பாதியாக பிரிப்பதென்பது தான் அரசர்முன் வந்த சவால்?
சோப்பு பெட்டிகள் நிறப்பட்டு வெளிவரும் இடத்தில் ஒரு பெரிய காற்றாடியை வைத்தார். ஒருவேளை சோப்புக்கள் நிரப்பப்படாமல் காலியாக ஏதேனும் பெட்டி வெளிவந்தால், காற்றின் வேகத்தில் அது தூக்கி எரியப்பட்டு விடும். பெரிதாக எந்தவொரு பொருட்செலவும் இல்லாமல் எளிதாக அந்த பிரச்சனை நிரந்தரமாக தீர்த்துவைக்கப்பட்டது. இப்படித்தான் பிரச்சனைகளை மாறுபட்ட கோணத்தில் அணுகினால், பல எளிமையான தீர்வுகள் பிறக்கும். இந்த கதை இன்றும் மேலாண்மைக் கல்வியில் ஒரு சிறந்த உதாரணமாக பயிற்றுவிக்கப்படுகிறது.
17 யானைகளை எப்படி கொல்லாமல் பிரிப்பதென்று எத்தனை யோசித்தும் எந்த மந்திரிக்கும் விடைகிடைக்கவில்லை. அந்த 17 யானைகளுடன் தன் ஒரு யானை சேர்ந்து, 18-ஆக்கி, பின் ½ பங்காக 9-ம், 1/3 பங்காக 6-ம், 1/9 பங்காக 2-ம் பிரித்துப்பார்த்திபோது, 9+6+2 = 17 போக தெனாலிராமனின் யானை மீதமிருந்தது. அந்த பெரியவர் விதித்த 17 யானைகளும் அவர் சொன்ன விகிதத்தில் அவரது பிள்ளைகளுக்கு சரியாக மீதமின்றி பிரித்து கொடுக்கப்பட்டது. அந்த 17 என்ற எண்ணை வைத்து விடை தேடினால் இந்த பிரச்சனைக்கு விடையே இல்லை. அதில் ஒன்றைக்கூட்டிப் பார்த்தபோது பிரச்சனை சுலபமானது. தீர்க்க முடியாத பிரச்சனையென்று எதுவும் இல்லை. நீங்கள் பார்க்கும் கோணம் மாறினால், எல்லாவற்றிற்கும் ஏதாவதொரு புதியவழி கிடைக்கும்.
உங்களுடைய பிரச்சனைகளை, தொடர்ந்து ஒரே கோணத்தில் அலசி வந்தால், ஒரே புள்ளியில் வந்துவந்து நிற்பீர்கள். அதை தீர்க்க ஒரு வழி கிடைக்காமல் திண்டாடவேண்டியது தான். அந்த பிரச்சனையிலிருந்து சற்று விலகிநின்று, வேறுபட்ட கோணத்தில் அந்த பிரச்சனையை அணுகினால், அவற்றை தீர்க வழிகிடைக்கலாம். பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுகுவதன் மூலம்
பல புதிய யோசனைகள் பிறக்கும். புதிய தீர்வுகள் கிடைக்கும்.
ஒரு பிரச்சனையை மாறுபட்ட கோணத்தில் முழுவதுமாக பிரித்து அலசிப்பார்க்க வழி ஏற்படும்போது, துல்லியமான தீர்வுகள் கிடைக்கப்பெறலாம்;
உங்கள் கற்பனை ஆற்றலை மேம்படுத்தி புதுமைகள் படைக்க வழி ஏற்படும்;
உங்கள் போட்டியாளர்களை காட்டிலும், நீங்கள் சந்தையில் சாதிக்க முடியும்
ஒரே இடத்தில் தங்கிவிடாமல், வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும்
புதிய கண்டுபிடிப்புக்களும், சாதனைகளும் நிகழ வழிபிறக்கும்
உங்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் வழிமுறைகள் தெளிவுபெறும்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய முயற்சிகள், புதிய அனுபவத்தை வழங்கி உங்கள் வியாபாரத்தை பெறுக்கும்;
பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரே மாதிரி இல்லாமல், புதிய கோணங்களில் வரும்போது, அந்த பிரச்சனைகள் நிரந்தரமாக விலகவும் தீர்வு கிடைக்கலாம். ஒரு செயலை ஒரே முறைமையில் செய்யாமல், வேறுகோணத்தில் சிந்தித்தவர்களால் மட்டுமே உலகத்திற்கு புதுமைகளை கொடுக்க முடிந்தது. உங்களுக்கு முன்னால் அப்படி சிந்தித்தவர்கள் கொடுத்ததுதான், இன்று நீங்கள் அனுபவிக்கும் அத்தனை அறிவியல் முன்னேற்றங்களும். நீங்கள் உங்கள் அடுத்த தலைமுறைக்கு அப்படி என்ன புதுமைகளை விட்டுவிட்டு செல்லப் போகிறீர்கள்?
அரைத்த மாவையே
எத்தனை நாளைக்கு அரைப்பது
சரியோ – தவறோ
புதிய கோணத்தில் முயற்சித்தால் மட்டும்
தீராது புதிர்கள் பலவும் தீரக்கூடும்;
புதிய கோணம் சாத்தியமில்லையென்று
எடுத்தவுடன் ஒதுக்கிவிடாதீர்கள்;
சாத்தியப்படக்கூடியதொரு புதியகோணத்தை
நீங்கள் தான் தேடிப்பிடுக்க வேண்டும்;
நீங்கள் ஒவ்வாது என்று ஒதுக்கியவொன்று
இன்று எல்லாவையுமாக வியாபித்திருக்கும் தருவாயில்
எல்லாவற்றிலும் இருந்து நீங்கள் விடைதேட வேண்டும்;
எல்லாகோணங்களிலும் விடைதேடுங்கள்!
புதிய கோணத்திலான முயற்சிதான்
பல தீராப் பிரச்சனைகளை தீர்த்திருக்கிறது!
- [ம.சு.கு 19.05.2023]
Comments