top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-44 – உங்கள் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-44

உங்கள் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்?


  • பள்ளியிலே சில மாணவர்கள் மனப்பாடம் செய்வதில் கில்லாடியாக இருப்பார்கள். அதேசமயம், அவர்களிடம் பாடத்தில் இல்லாத புதிய தலைப்பு பற்றி பேசினால், திருதிருவென்று முழிப்பார்கள். ஓவியம் வரையச் சொன்னால், எதையாவது பார்த்து வரைவார்கள். பார்த்து வரைய எதுவும் கொடுக்கப்படாவிட்டால் திண்டாடுவார்கள். ஒரு சில மாணவர்களோ, புத்தகத்தை தாண்டி நிறைய பேசுவார்கள், புதிய கோணத்தில் கேள்வி கேட்பார்கள், புதியவற்றை படைக்க முயற்சிப்பார்கள். இவர்களில் சிலருக்கு பாடத்தைப் பற்றிய கவலையே இருக்காது. அப்படி என்ன வேறுபாட்டை இந்த மாணவர்களிடையே நீங்கள் காண்கிறீர்கள்?

  • அலுவலகத்தில், புதிய வாடிக்கையாளர், புதிய திட்டங்களை பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தும்போது, ஒரு சில ஊழியர்கள் “இன்னின்னது செய்யலாம்”, “இது செய்தால் இன்ன சிக்கல்வரும்”, “இது வேண்டாம்” என்று பல ஆலோசனைகளை சொல்லுவார்கள். ஒரு சிலர் வாய் திறக்கவே மாட்டார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டாலும், பெரிதாய் ஒன்றும் சொல்லாமல், ஏதாவது ஒன்றை சொல்லி சமாளித்து விடுவார்கள். இந்த இரு வேறுபட்ட ஊழியர்களிடம் என்ன வேறுபாடு?


பாட புத்தகம் மட்டுமே கல்வி என்று எண்ணுகிற மாணவர்கள், அதைத் தாண்டி எதையும் கனவு காண்பதில்லை. அந்த மாணவர்களிடம் உனது இலட்சியம் என்ன? வாழ்வில் என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்டால், இந்த குறிப்பிட்ட பணியில் சேரவேண்டும் என்று, தன் இலட்சியதிற்கு சிறியதொரு எல்லையை வகுத்துக் முடித்துவிடுகின்றனர். ஒரு சிலரோ, எது எல்லை என்று தெரியாமல், கற்பனை உலகத்தில் எண்ணற்றவற்றில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் பார்த்தால், பாட புத்தகத்தை மட்டுமே படித்தவன் புதிதாய் எதையும் படைக்காமல் வெறுமனே ஏதேனுமொரு அலுவலகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருக்கிறான். வாழ்விலே என்ன புதிதாய் சாதித்தாய் / படைத்தாய் என்றால், பெருமையாய் சொல்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.


அலுவலகத்தில் புதிய திட்டங்கள் தொடங்கப்படும் போது, அதில் உள்ள இலாப-நஷ்டங்கள், வரப்போகும் சிக்கல்கள், பேராடி சாதிக்கப் போகின்றவைகள், என்று எண்ணற்றவற்றை சிந்திக்க வேண்டியிருக்கும். இந்த முறையில் செய்தால் என்னவாகும்? எதிர்மறையாக நிகழ்ந்தால் என்னவாகும்? என்று பல அனுமானங்களையும், விளைவுகளையும் யூகிக்க வேண்டியிருக்கும். அப்படி எண்ணற்றவற்றை கனவிலும், கற்பனையிலும், அனுமானித்து, தொடர்ந்து அவற்றிற்கான தீர்வுகளையும் சிந்திப்பவரால் மட்டுமே, புதியவற்றை தொடங்கி, அதில் எதிர்வரும் எல்லா சவால்களையும் சந்தித்து சாதனைகள் படைக்க முடியும். இந்த ஆக்கப்பூர்வமான ஆலோசனையில், எந்த ஊழியர் பங்கெடுத்து நிறுவனத்திற்கு தன்னாலான பங்களிப்பை அளிக்கிறாரோ, அவரையே நிறுவனம் அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.


நம் கற்பனை குதிரையை கட்டிப்போட்டு விட்டால்,

புதிதாய் படைக்கு முயற்சியில்

முதல் அடியிலேயே முட்டி நிற்க வேண்டியதுதான்.


எல்லாவற்றையும் நாமே அனுபவப்பட்டு தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. எந்த செயலிலும், எந்த பயணத்திலும், என்னவெல்லாம் நேர வாய்ப்பிருக்கிறது என்று கற்பனையிலேயே பல விளைவுகளையும், சாதக-பாதகங்களையும் அனுமானிக்கலாம். அவை அனைத்தும் நிகழ்ந்துவிடுமா? என்றால் இல்லை. பின் எதற்காக சிந்திக்க வேண்டுமென்று கேட்கின்றீர்களா? பல அனுமானங்களையும் விளைவுகளையும் முன்கூட்டியே யோசிப்பவருக்கு, அவரின் பயண பாதையில் ஏற்படும் திடீர் தடைகளையும், திருப்பங்களையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் மனதைரியம் இயல்பாகவே அமையப்பெரும்.


என்ன நடக்கலாம் என்ற யூகமில்லாமல் முன் சென்றாள், எது நடந்தாலும் அது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இந்த செயலை இப்படி செய்தால், ஒன்று வெல்வோம் அல்லது தோற்போம்; வென்றால் பாராட்டு கிடைக்கும்; இல்லாவிட்டால் தோற்பதன் காரணமாக நம் செல்வத்தையோ, நற்பெயரையோ இழக்க நேரிடலாம், ஒருவேலை நாம் எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லையென்றால், மேற்கொண்டு இழப்புகள் நேராமல் நிறுத்த, இந்த தடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்று எல்லா கோணங்களிலும் முன்னரே யூகிப்பவரால், பயணத்தில் ஒவ்வொரு அடியையும் அதன் சாதக-பாதகங்களையும், விளைவுகளையும் கணக்கிட்டு எடுத்துவைத்து, எதிர்வரும் எல்லாவிதமான சவால்களையும் சந்தித்து, சாதிக்க முடிகிறது.


பள்ளி மாணவரோ, கலையுலக படைப்பாளியோ – யாராயினும்

கற்பனை குதிரை ஓடினால்தான் அறிவின் எல்லை விசாலமாகும்;

எல்லாவற்றையும் அனுபவத்திலேயே தெரிய வேண்டுமென்றால்

தெரிந்து கொள்ள வெகுகாலம் பிடிக்கும்;


காவியத்தை படிக்கும் போது

காவிய நாயகனாய் நீங்கள் பயணித்தால்

அந்த காவியமே உங்கள் எண்ணத்தில் வண்ணப்படமாகும்;


கற்பனை இல்லாமல் எதை செய்தாலும்

நீங்கள் அதில் லயித்திருப்பது சாத்தியமில்லை;


புதியவற்றை படைக்க, முதலில் அந்தப் படைப்பு

உங்கள் கற்பனையில் உருவாக வேண்டும்;

கற்பனையில் வராதது எதுவுமே

நிஜத்தில் யாராலும் சாதிக்க முடிந்ததில்லை;


- [ம.சு.கு 22.11.2022]

9 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page