top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-7 – எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க தொடங்குங்கள்

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-7

எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க தொடங்குங்கள்....


  • இன்று தாமதமாக அலுவலகம் போகிறோம், கட்டாயம் மேலாளர் திட்டுவார் என்று எண்ணிக் கொண்டே போவோம். போனவுடன் நன்றாக திட்டுவார். பேருந்தை இன்று தவறவிட்டுவிடுவோம் என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டே போவோம். குறித்த நேரத்துக்குள் நாம் சென்றாலும், அன்றைய தினம் நாம் செல்லவேண்டிய பேருந்து, சற்று சீக்கிரமாக வந்து போயிருக்கும். “நமக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று நம்மை நாமே நொந்துகொள்வோம்.

  • கேள்வித்தாளில் முதல் இரண்டு கேள்விகளை பார்த்தவுடன், அதிர்ந்துபோய் ஏதும் தெரியவில்லை, “நாம் இன்று முடிந்தோம்” என்று நம்பிக்கை இழக்கிறோம். அடுத்த பக்கத்தில் உள்ள கேள்விகளுக்குரிய விடை தெரிந்தாலும், முதல் பக்கத்தில் இழந்த நம்பிக்கை, நம்மை எதிர்மறையாகவே வழிநடத்தி, தேர்வெழுதுவதை பாதிக்கிறது. நமக்குத் தெரிந்ததைக்கூட சரியாக எழுதாமல் அரைகுறையாக எழுதுகிறோம். விளைவு, தோல்வி!

  • “வியாபாரத்தில் தோற்றுவிட்டேன்”, “நுழைவுத் தேர்வில் தோற்றுவிட்டேன்”, “காதலில் தோற்றுவிட்டேன்”, “என் இலட்சியத்தில் தோற்றுவிட்டேன்” - நான் எதற்கும் இலாயக்கற்றவன் என்று தீவிரமாக எண்ணிக்கொண்டு, “இனி எனக்கு வாழ தகுதியில்லை” என்று தற்கொலை செய்யும் முட்டாள்களும் இருக்கத்தான் செய்கின்றனர்..


இப்படி “என்னால் முடியாது!”, “எனக்கு இது வராது” “எனக்கு அதிர்ஷ்டம் இல்லை” என்று நீங்களாகவே சிலவற்றை முடிவெடுத்திருந்தால், முதலில் அதை சற்று தூரம் தள்ளிவையுங்கள். “ஏன் முடியாமல் போகும்?” என்று அடிப்படையை கேள்வி கேளுங்கள்.


நம்மனத்தில் நிமிடத்திற்கு 100 எண்ணங்கள் வந்து போகும். தோன்றும் எண்ணங்களுள் எதிர்மறையானவற்றைக் கவனமாக தவிர்க்க தொடங்குங்கள். அப்படி எதிர்மறை எண்ணம் வந்தால், அதைப் பற்றி தொடர்ந்து சிந்திக்காமல், வேறு ஒன்றுக்குத் தாவிவிடுங்கள். ஒருவேளை எதுவுமே முடியவில்லை என்றால், ஏதாவதொரு நல்ல புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கிவிடுங்கள்.


நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கை


நம்முள் வருகின்ற என்னத்தை நம்மால் தடுக்க முடியாது. நாம் அவ்வளவு பெரிய ஞானியர் அல்ல. ஆனால் வந்த எண்ணத்தை நம்முள் வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.


  • அலுவலகத்தில் வேலை அதிகம், மேலாளர் திட்டுவார், என்று எதிர்மறையாக யோசிக்காமல் ஒவ்வொன்றாய் எடுத்து செய்து முடிப்போம். செய்வதைத் திருந்தச் செய்வோம் என்று முயற்சிப்போம்.

  • இரண்டு கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டாலென்ன! அதிகபட்சம் 20 மதிப்பெண் குறையும். மீதமுள்ள 80 மதிப்பெண்ணை முழுமையாகப் பெற, சிறப்பாக எழுதுவோம், என்று அனுகுவதே வெற்றி.

  • வியாபாரத்தில் தோற்றால், வேலைக்கு சென்று சம்பளத்தில் குடும்பத்தை காப்பாற்றலாம். இந்த முறை நுழைவுத்தேர்வில் தோற்றால், அடுத்த ஆண்டு எழுதலாம், அல்லது வேறு படிப்பிற்கு செல்லலாம். காதலில் தோற்றால் நம்மை ஏற்றுக்கொள்ளும் பெண்ணை மணந்து காதலிக்கலாம், அல்லது பிரம்மச்சாரியாகவே மக்களுக்கு சேவை செய்யலாம். இலட்சியத்தில் தோற்றால், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த தோல்விகளில் என்ன கெட்டுப் போய்விட்டது! இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ள!


எல்லாமே அழிந்தாலும், சூனியத்திலிருந்து நம்மால் புதிய இராஜ்ஜியத்தை உருவாக்க முடியும்போது, ஏன் எதிர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும். நம்மால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தை கவனத்தோடு வளர்ப்போம். ஒரே நாளில் பெரிய மாற்றம் ஏற்படாவிட்டாலும், படிப்படியாய் நம்முடைய எண்ணங்கள் நம்மை வெற்றிப் பாதையில் வழிநடத்தும்.


நீங்கள் நேர்மறை எண்ணங்கள் வளர்த்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டிய இரண்டு விடயங்கள்:


  1. உங்களுடைய எண்ணங்களின் மீது விழிப்போடு இருங்கள். எதை வளர்க்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டுமென்று கவனமாக இருங்கள்!

  2. உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளும், சுற்றியுள்ளவர்களும் நேர்மறையான எண்ணங்களை கொண்டவர்களாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.


வெற்றி நிச்சயம்!


- [ம.சு.கு 16.10.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page