top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டினால் மட்டுமே போதுமா?

கைவந்த கலைகளை மட்டுமே

திரும்பதிரும்ப செய்து கொண்டிருந்தாள்

புதியவற்றை என்று கற்றுக் கொள்வது?

கைவராத கலைகளுக்கும்

நேரம் ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள்

எல்லாமே கைகூடும் ஒருநாள்!


குழந்தைகளின் ஆராயும் குணம்


குழந்தைகள், தங்களுக்கு புதிய பொருள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால், என்ன செய்கிறார்கள் என்று பார்த்து இருக்கிறீர்களா? அவர்கள் புதியதாக கிடைத்த பொருள் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? அதை வைத்து எப்படி விளையாடுவது? என்று தொடர்ந்து ஏதேனும் ஒரு வகையில் ஆராய்ச்சி செய்து பார்க்கும். எல்லாம் செய்து பார்த்த பின்னனும், அது சரியாக ஒத்துவரவில்லை என்றால், அந்தப் பொருளை வீசி விட்டுச் சென்றுவிடும்.


பின்னர் அந்த பொருளை அந்த குழந்தை எடுக்கவே எடுக்காது. விளையாட்டுப் பொருட்கள் விடயத்தில் குழந்தைகள் புதியவற்றை தொடர்ந்து சோதித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. தன்னிடத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களைக் காட்டிலும் புதிய பொருட்களுக்கும், பிறரிடம் உள்ள பொருளுக்கும் அதிக அவாலுடன் முயற்சி செய்யும்.


இப்படி நம்மில் எத்தனை பேர், அவரவர் வாழ்க்கையில் பல சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறோம்? பிறரிடம் உள்ள பொருளுக்கு ஆசைப்பட வேண்டாம். ஆனால் பிறரை மிஞ்ச, புதிய முயற்சிகளும், பயிற்சிகளும் கட்டாயம் தேவையென்பதை நம்மில் எத்தனைபேர் உணர்ந்து செயல்படுகிறார்கள்?


மனிதன் மாற்றத்துக்கு தயங்குகிறான்


மனிதர்கள், ஒரு குறிப்பிட்ட வேலையில் பணிஅமர்ந்து, பின் திருமணம், குழந்தைகுட்டிகள் என்று வந்துவிட்டால், அவர்களில் எத்தனை பேர் புதிய மாற்றங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். இப்போது நடப்பவைகள் எல்லாம் எந்த தொந்தரவும் இல்லாமல் அப்படியே தொடர்ந்து நடந்தால் போதும் என்று மாற்றங்களை தவிர்க்கும் எண்ணற்ற குடும்பஸ்தர்களும், பயந்தவர்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். மாற்றமொன்றே மாறாதது என்ற உண்மையை மறந்து எதுவும் மாறாக்கூடாதென்று வேண்டும் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.


உலகம் கணினிமயமானபோது


இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன், தட்டச்சர்கள் பலரும் கணினி கற்றுக் கொள்ள தயக்கம் காட்டினார்கள். அது தேவையற்றதென்று சொல்லிவந்தனர். காலப்போக்கில், எல்லாமே கணினி மயமானபோது, அவர்கள் ஒரிரு படி பின்னுக்குத் தள்ளப்பட்டனர். கணினியை கற்றவர்கள் வேகமாக முன்னேற வாய்ப்பு கிடைத்தது.


கணினி மென்பொருள் உலகில் ஜாவா (Java) என்ற ஒன்றை மட்டும் நம்பி, தன் திறன்களை வளர்க்காதவர்கள் பலர், சில வருடங்களுக்கு முன் வேலை இழக்க நேரிட்ட நிகழ்வுகள் எல்லோரும் அறிந்த ஒன்று. கணினி மென்பொருள் துறையில் நாளுக்கு நாள் புதியவைகள் வருகின்றன. இன்றைய இளைய சமுதாயம், இந்த கணினியையும் தாண்டி கைபேசியிலேயே எல்லாவற்றையும் செய்யுமளவிற்கு வந்து நிற்கிறது. இந்த மாற்றங்களுக்கு, ஒரு படி முன்னதாகவே யார் தயாராக இருக்கின்றாரோ, அவரே அடுத்தடுத்த கட்டங்களுக்கு, முன்னேறிச் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது.


புதுமைகளை அறிந்து கொள்ளவில்லை என்றால்,

நம் வீட்டுப் பிள்ளைகள் கூட நம்மை மதிப்பதில்லை.


வலைதளப் பரிவர்த்தனை


பணத்தைக் கையில் தொட்டு, புழங்கிப்பழகிய தலைமுறை நாம். ஆனால் அரசாங்கம் அதற்கான மூடு விழாவை தொடங்கி விட்டது. இனி வலைதள பரிவர்த்தனைகளும், மெய்நிகர் நாணயங்களும் கூடிய விரைவில் உலகை வழிநடத்தப்போகின்றன. இனியும் நாம் இவற்றை கற்றுக்கொள்ள தாமதித்தால், கிணற்றுத் தவளைகளாகவே வாழ நேரிடும்.


நாம் எவற்றையெல்லாம் நம் கண்ணால் பார்த்து, கைகளால் தொட்டு உணர்ந்து தேர்வு செய்தோமோ, அவைகள் எல்லாம் இன்று வளைதளங்களில் கைபடாமல் விற்று-வாங்கப்பட்டுக் கொண்டுருக்கின்றன. மின்னனு துறையின் வளர்ச்சியும், தகவல் தொடர்புகளின் வேகமும், கம்பியில்லா பரிமாற்றத்தின் அசுரவளர்ச்சியும் இன்றிருக்கும் எண்ணற்றவைகளை நாளை இல்லாமல் ஆக்கிவிடும் {உத; வாகன ஒட்டுனர், கணினி தட்டச்சு,.....}


பழம்பெருமை பேசினால் போதுமா?


தமிழர்களின் பழம்பெருமைகளை பேசும் நாம், அவற்றுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் என்னென்ன புதுமைகளை படைத்தோம் என்பதை பற்றி யோசிப்பது இல்லை. நம் முன்னோர்கள் இப்படி இருந்தார்கள், இவற்றைக் கட்டினார்கள் என்று பெருமை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தலில் என்ன பயன்? அந்த பழமையான அறிவியல் அறிவு ஏன் இன்று அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. அந்த அறிவு தொலைந்துவிட்டதா? அல்லது அறிவுள்ளவர்கள் நாட்டைவிட்டு சென்றுவிட்டார்களா?


இன்றைய வேகமான உலகில், நாம் அந்த இயக்கத்தைக் காட்டிலும் ஒரு படி வேகமாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். பூமி சுற்றும் வேகத்தைவிட சீக்கிரமாக விமானங்கள் பறக்கின்றன. ஒலியின் வேகத்தை என்றோ கடந்துவிட்டோம். இப்பொழுது ஒளியின் வேகத்தோடு போட்டி நடந்து கொண்டிருக்கிறது.


போட்டிகளே வாழ்க்கையாகிவிட்டன


பிறந்தது முதல், மரனம்வரை எங்கும், எதிலும் போட்டி.. எல்லாவற்றிற்கும் எண்ணற்ற போட்டியாளர்கள். எல்லா போட்டியாளர்களையும் கடந்து நீங்கள் தனியாக தெரிய வேண்டும் என்ற ஆசை இருந்தால், நீங்கள் அசாதாரண காரியங்களை மிகவும் சாதாரணமாக செய்து காட்ட வேண்டும்.


சௌகரியத்திலிருந்து வெளிவந்தால்தான் வெற்றி


காலை 5 மணிக்கு எழுவதற்கு எல்லோரும் திட்டமிட்டாலும், கடிகாரம் அடித்தவுடன் அதைஅனைத்துவிட்டு தொடர்ந்து உறங்குகின்றனர், ஏனெனில் அந்தநேரத்தில், உறக்கம் மிக சௌகரியமாக இருப்பதால். நடைமுறையில், யாரொருவர் தனது சௌகரியமான நிலைகளில் இருந்து வெளிவந்து புதிய முயற்சிகளையும் சோதனைகளையும் செய்கிறாரோ, அவரால்மட்டும்தான் வெற்றியை நெருங்கமுடிகிறது.


பல சாதனையாளர்கள், தங்களின் 6-7 இலக்க ஊதியத்தை உதறிவிட்டு தங்களின் கனவுகளை மெய்ப்பிக்க களத்தில் இறங்கி சாதித்தார்கள். தங்களின் கனவுகளிலிருந்து உற்சாகத்தையும் உத்வேகத்தையும் வளர்த்தார்கள் தங்களின் கடின உழைப்பால் வரலாறுகளில் தங்களின் பெயர்களை பொன்னெழுத்துக்களாக்கி விட்டனர்.


உழைப்போம் - உயர்வோம்


கடுமையாக உழைத்தால் கட்டாயம் தலைநிமிர்ந்து வாழலாம். உங்களின் கடுமையான உழைப்புடன் சற்றே சாமர்த்தியத்தையும் சேர்த்துக்கொண்டால் வாழ்வில் சாதிக்கலாம்.


சாமர்த்தியமான உழைப்பாளிகள் எல்லோரும் சாதிக்கிறார்கள்

உழைப்பை - உறுதியோடு துவக்குங்கள்;

சாமர்த்தியத்தை - சமுதாயத்திடமிருந்து கற்றுக்கொள்;


கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டிருந்தால், கடலின் நீள-அகலங்களை கற்பனை கூட செய்ய முடியாது. இந்த உலகம் என்னும் களம் மிகப் பெரியது. நம் தடம் பதிக்க நிறைய இடம் இருக்கிறது. எதில் எப்படி தடம் பதித்து சமுதாயத்தை வாய்பிழக்கச் செய்வோம் என்பது நமது தேர்வே.


குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், பந்தயங்களில் பங்கெடுத்து நம்மை பரீட்சித்துப் பார்த்தால்தான், நமது திறமையும் ஆற்றலும் நமக்கே முழுமையாய் தெரியும். எதில் சிறப்பாக இருக்கிறோம், எதில் கவனம் தேவை என்பது நமக்கே தெரியும்.


புதிய களங்களை காண தயாராகுவோம்;

புதுமைகள் பல படைத்து பழமைக்கு பெருமை சேர்ப்போம்;

மண்ணுலகின் மன்னர்களாய் வெற்றியுடன் வலம் வருவோம்:


- [ம.சு.கு – 26-01-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page