top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 269 - உங்கள் எதிர்பார்ப்பை தெளிவுபடுத்துங்கள்!"

Updated: Jul 6, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-269

உங்கள் எதிர்பார்ப்பை தெளிவுடுத்துங்கள்?


  • உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் கணக்காளரிடம், எல்லா கணக்கு அறிக்கைகளையும் அடுத்தவார இயக்குனர்கள் சந்திப்பிற்கு தயாரிக்கச் சொல்லிவிட்டு வெளியூர் சென்றுவிடுகிறீர்கள். அதிக அனுபவம் இல்லாத அவர், தனக்கு தெரிந்த இலாப-நட்டக்கணக்கையும், இருப்புநிலைக் கணக்கையும் அறிக்கையாக தயாரித்து வைத்துவிட்டார். இயக்குனர் சந்திப்பிற்கு முந்தையநாள் ஊரிலிருந்து திரும்பிய நீங்கள், அன்று மாலை அறிக்கைகளை தயார் நிலைகுறித்து கேட்கிறீர்கள். வெறும் இரண்டு அறிக்கைகள் மட்டும் தயாராக இருப்பதைக்கண்டு அதிர்ச்சி. இயக்குனர்கள் எண்ணற்ற கேள்விகள் கேட்பார்கள், அதற்குத் தேவையான அறிக்கைகளை ஏன் தயாரிக்கவில்லை என்று அந்த புதிய ஊழியரைக் கேட்கிறீர்கள். என்னென்ன தேவைப்படும் என்று தனக்கு தெரியாது என்ற பதில் வருகிறது. கணக்கியலின் அடிப்படை இரண்டு அறிக்கைகளை தயார்செய்த அவருக்கு, தேவைப்படும் கூடுதல் அறிக்கைகளை தயார் செய்ய முடியும். ஆனால் முதலாளிக்கு அப்படி என்னென்ன அறிக்கைகள் வேண்டுமென்று எப்படி அவருக்கு தெரியும்?

  • 10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு / பட்டப்படிப்பு தேர்வுகளை நம் மாணவர்கள் எளிமையாக எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்று தேர்வாகிவிடுகிறார்கள். பலர், 100% மதிப்பெண் பெறுகிறார்கள். அதேசமயம் மத்திய தேர்வானையம் நடத்தும் ஆட்சிப்பணி தேர்வுகளில் சொற்பமானவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள். நன்றாக படிக்ககூடிய, அதிக கவனமாக பொது அறிவை வளர்த்துக்கொண்டவர்கள் நிறைய பேர் எழுதினாலும், ஏனோ வெகு சிலரே தேர்வாகின்றனர். ஏன்?

புதிதாக சேர்ந்த ஊழியருக்கு, இயக்குனர்கள் என்ன மாதிரியான அறிக்கைகளை எதிர்பார்ப்பார்கள் என்று தெரியாது. தன் மேலாளர் பொதுவாக அறிக்கைகள் என்று சொன்னவுடன் அடிப்படை அறிக்கைகளை தயாரித்து விட்டார். ஆனால் நிறுவனத்தின் இலாப-நட்டங்களை தாண்டி எண்ணற்ற வாடிக்கையாளர் விவகாரங்கள், உற்பத்தி & விற்பனை விலை மாற்றங்கள், ஊழியர் தேவைகள், சந்தை நிலவரம் என்று எண்ணற்ற விடயங்களை விவாதிப்பார்கள். அவற்றிற்கான அறிக்கைகளை கணக்கியல் துறையினர் வழக்கமாக தயாரித்து வழங்குவார்கள்.


மேலாளர் இன்னின்ன அறிக்கை தேவையென்று தெளிவாக சொல்லியிருந்தால் ஊழியர் தாயரித்திருப்பார். பொதுவாக சொன்னதால், ஒன்றிரண்டோடு நின்றுவிட்டார் ஊழியர் சென்றமாத அறிக்கைகள் குறித்த கோப்பை திறந்து பார்த்திருந்தால் என்னென்ன அறிக்கை என்று தெரிந்திருக்கும். ஆனால் அவரும் அதை பாரக்கவில்லை. அவர் பார்த்துவிடுவார் என்று மேலாளர் எதிர்பார்த்தார். அதை சொல்லியிருந்தால் அவர் பார்த்திருக்கக்கூடும். புதியவர்களிடம் 1-2 நிமிடம் செலவிட்டு, மேலாளர்கள் தங்களுக்கு என்னென்ன தேவை, அவர்கள் வேலையில் எதிர்பார்ப்புக்கள் என்னவென்று தெளிவுபடத்தினால், இருவருக்கும் நன்றாக இருக்கும். வேலை செய்பவருக்கு என்ன செய்யவேண்டுமென்ற தெளிவிருக்கும். மேலாளருக்கு தேவையானவை சரியாக கிடைக்கும். இந்த எதிர்பார்ப்புக்கள் குறித்த தெளிவான உறையாடல் நடக்காதபோது, எல்லா குழப்பங்களும், கடைசி நிமிட மனஉளைச்சல்களும் ஏற்படுகின்றன.


10 / 12-ம் வகுப்புத் தேர்வுகளின் பாடங்கள் தெளிவாக முன்னரே கொடுக்கப்படுகின்றன. தேர்விற்கான கேள்விகள் அந்தந்த புத்தகத்திலிருந்து மட்டும் கேட்கப்படுகின்றன. அதனால், தேர்வர்களின் எதிர்பார்ப்பு என்வென்று ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாக தெரியும். அதை நன்றாக படித்து எளிதாக தேர்வாகிறார்கள். அதேசமயம், பணியாளர் தேர்வானையத்தின் பொதுத் தேர்வுகள் எல்லையாற்ற பாட வரையரை கொண்டவை. நாட்டு நடப்பு, பொது அறிவு என்ற விடயங்கள் தினம் தினம் கூடிக்கொண்டே இருக்கும் தலைப்புக்கள். அவற்றில் தேர்வர்கள் எதை வேண்டுமானாலும் கேட்க்ககூடும்.


எவ்வளவுதான் தேடித்தேடி படித்தாலும், மாணவர்கள் தேர்வாவது உறுதியில்லை. மேலும், குறைந்தபட்ச 40 மதிப்பெண் பெற்றுவிட்டால் தேர்வு உறுதியென்று சொல்லிவிடமுடியாது. அந்த ஆண்டு 500 காலியிடங்கள் இருந்தால், முதல் 500 நபர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். அப்படியானால் தேர்வாக முதல் 500 இடங்களுக்குள் வரவேண்டும். என்னென்ன புத்தகத்திலிருந்து கேள்விகள் வரும், எத்தனை மதிப்பெண் எடுத்தால் தேர்வு உறுதி, எத்தனை பேரை தேர்வு செய்கிறார்கள் என்று தேர்வானையம் சொல்வதில்லை. தேர்வானையத்தின் எதிர்பார்ப்புகள் தெளிவாக சொல்லப்படாத வரை, இந்த தேர்வுகள் கடினமானதாகவே இருக்கும்.


தேர்விற்கு இந்திந்த புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று தெளிவாக வரையருக்கப்பட்டால், மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். அது 10 புத்தகமோ, 500 புத்தகமோ ஒரு தெளிவான வரையரை, எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேர் தேறிவிடுவார்கள். தேர்வுக் கேள்விகள் 10-15 புத்தகங்களிலிருந்தே எடுக்கப்பட்டாலும், அவை எந்த புத்தகங்கள் என்று யாருக்கும் தெரிந்திருப்பதில்லை. அதனால் அந்த தேர்வுகள் இன்றும் கடினமானதாகவே தொடர்கின்றன. இப்படி எதிர்பார்ப்புக்கள் என்ன என்று சொல்லாமல் 10 / 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்தினால், நம் மாணவர்களின் நிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.


என்னென்ன எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன;

  • தனிமனிதனாக, உங்கள் குடும்பத்தில் உங்கள் பெற்றோர்கள் ,மனைவி-மக்கள், உறவுகள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கலாம்;

  • உங்கள் நிறுவனத்தில், உங்கள் ஊழியர்கள் என்ன செய்யவேண்டுமென்று நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம்;

  • இந்த சமுதாயத்தில் நண்பர்கள், சக ஊழியர்கள், அண்டைவீட்டார் என்று நிறைய நபர்களுடன் பயனிக்கிறீர்கள். அவர்களிடம் உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்கும்;

  • உங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு, உங்கள் பொருட்களின் மீது நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அதேபோல, நீங்களும் ஒருவாடிக்கையாளராக நிறைய எதிர்பார்ப்புக்களை கொண்டு பொருட்களை வாங்குவீர்கள்;

  • ஒரு நல்ல குடிமகனாக நாட்டின் சட்டங்களை நீங்கள் மதித்து, மனிதநேயம் காக்கவேண்டுமென்று அரசாங்கம் எதிர்பாக்கிறது. அதேசமயம் இந்திந்த அடிப்படை தேவைகள், கட்டமைப்புக்களை அரசாங்கம் செய்துதர வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்;

இப்படி ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புக்கள் எல்லோருக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக்களை உரியவரிடம், உரியநேரத்தில் தெரிவித்தால், அவர்கள் அதை செய்து கொடுப்பார்கள். உங்கள் எதிர்பார்ப்பை தெளிவாக தெரிவிக்காமல், உங்கள் எண்ணம்போல எல்லாம் நடக்கவேண்டுமென்று எதிர்பார்த்தால், அவை வெறும் கனவாக இருந்துவிடும்.


உங்களின் எதிர்பார்ப்புக்கள் நியாயமானதாக இருந்து, அதை உரியவர்களிடம் தெளிவாக சொன்னால், அவை கட்டாயம் நிறைவேறும். உங்களின் வெற்றியும் உறுதியாகும்!!


உங்கள் ஊழியர்கள் என்னனென்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

உங்கள் குடும்பத்தினர் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

அதை அவர்களிடம் என்றைக்காவது தெளிவாக கேட்டிருக்கிறீர்களா?

நீங்கள் தெளிவாக சொன்னபின் எத்தனை சதவிகிதம் அதில் குளறுபடி ஏற்பட்டது?

நீங்கள் சொல்லாதபோது எத்தனை சதவிகிதம் அந்த செயல் நடந்தது?

இந்த கேள்விகளுக்கு உங்கள் அனுபவங்களை அலசுங்கள்!

உங்கள் சுயஅலசல் தான் உங்கள் தெளிவான பயனத்தின் வழிகாட்டி!!


வியாபாரமோ, வேலையோ, குடும்பமோ,

எல்லாவிடத்திலும் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கும்!

அதேபோல மற்றவர்களுக்கு நம்மிடம் எதிர்பார்ப்பு இருக்கும்!

அவர்கள் செய்வதானாலும், நீங்கள் செய்வேண்டியதானாலும்

என்ன செய்யவேண்டுமென்று தெளிவாக தெரிந்தால்

அதை சிறப்பாக செய்துமுடிக்கலாம்;

எதிர்பார்ப்பு என்னவென்று தெரியாவிட்டால்

என்ன செய்வதென்று முழிக்கவேண்டியதுதான்!!


யாரிடம் வேலைசொல்லவதானாலும்

யாரிடம் உதவிகேட்பதானாலும்

உங்கள் எதிர்பார்பென்ன என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள்!

தெளிவான தகவல், சிறந்த தொடக்கத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது!




- [ம.சு.கு 05.07.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page