top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-133 - எது தெரிகிறது - நிறையா? குறையா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-133

எது தெரிகிறது - நிறையா? குறையா?


  • எனக்கு தெரிந்த அலுவலகத்தில், சென்ற ஆண்டு நல்ல சாமர்த்தியமான சில ஊழியர்கள் உதவியாளர்களாக பணியாற்றினார். ஆனால் இப்போது போனபோது யாரும் இருக்கவில்லை. அந்த அலுவலக முதலாளி, ஊழியர்களை கட்டுப்படுத்திவைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், எப்போதும் ஏதாவதொரு குறைகண்டுபிடித்து திட்டிக்கொண்டே இருப்பார். அங்கு வேலைக்குச் சேரும் எல்லா ஊழியர்களும் ஓராண்டுக்குள் வேறுவேலைக்கு சென்றுவிடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், புதிய ஊழியருடன் வாடிக்கையாளர்கள் பேசிப்புரிய வைக்கவேண்டியிருப்பதால், சில வாடிக்கையாளர்களும் விலக ஆரம்பித்தனர்! இங்கு இழப்பு யாருக்கு?

  • ஒவ்வொரு தேர்தலிலும் எல்லோரும் வாக்களிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஆள்பவர்கள் சரியில்லை என்று குற்றம்கூறிவிட்டு அதே கட்சியின் வேட்பாளருக்கு பணத்தை வாங்கிக்கொண்டு முத்திரை குத்திவிட்டு வருகிறார்கள். கேட்டால் பணம் வாங்கிய நாணயத்திற்கு ஒட்டு போட்டதாய் சொல்கிறார்கள். அவர்களும் முதலீடு செய்த பணத்தை, அரசியல் என்னும் தொழிலில் பலமடங்காய் திரும்பப்பெற கடுமையாக உழைத்து கரக்கிறார்கள். நீங்களே அவர்கள் சரியில்லை என்று குறைகூறிவிட்டு, அவர்களையே தேர்ந்தெடுத்தால், யார்தான் உங்களை காப்பாற்றுவார்கள்!

தொழிற்கூடங்களில், அலுவலகங்களில் நமக்குகீழ் பணிபுரியும் ஊழியர்களை கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்ற பழைய சித்தாந்தத்தை நினைத்துக்கொண்டு, இன்று அதிகாரத்தோடும், குறைகளையே தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வேலைவாங்க முற்பட்டால், ஊழியர்கள் வேறுவாய்ப்பு கிடைக்கும்வரை சகித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். திடீரென்று ஒருநாள் வேலையைவிட்டு நின்றுவிடுகிறார்கள். நன்கு வேலைசெய்பவர்களைளிடமும் தொடர்ந்து குறைகண்டு அதிகாரம் செலுத்தினால், சீக்கிரத்தில் அந்த நல்ல நபர்கள் உங்களை விட்டு பிரிந்துவிடுவார்கள். இது வேலை புரியுமிடம் மட்டுமல்லாமல், வீட்டிலும், உறவுகளுக்குள்ளும் இதே கதைதான். தொடர்ந்து அதீதமாக குறைகண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், உங்களுடைய துணையும் ஒருநாள் உங்களைவிட்டு விலகநேரிடும்.


அரசியலில், அரசாங்க செயல்பாடுகளில் எண்ணற்ற குறைகளை நாம் காண்கிறோம். காலை எழுந்தது முதல் இரவு வரை தொடர்ந்து சாக்கடை சரிசெய்யவில்லை, குப்பையள்ள வரவில்லை, சாலை சீர்செய்யவில்லை, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படவில்லை, சுகாதாரம் இல்லை என்ற தொடர்ந்து சமுதாயத்தில் ஏதேனும் குறைகண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் சரிசெய்ய நேர்மையானவரை தேடி வாக்களிக்கலாம், தன்வீட்டுக்குப்பையை தரம்பிரித்து சரியாக போடலாம், போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்கலாம்........ நிறைய திருத்தங்களை நீங்களே செய்யத்துவங்கலாம்...உங்களைப் பார்த்து பத்து பேர் திருந்தினால், அவர்களைப் பார்த்து இன்னும் பத்துபத்து பேர் திருந்த வாய்ப்புள்ளதே! குறை சொல்வதைவிட்டு சரிசெய்ய நீங்கள் களமிறங்க தயாரா?


எங்கும், எதிலும் அதீதமாக குறையை மட்டுமே காண்பவர்களுக்கு

  • அதிக மன அழுத்தம் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரித்து எல்லா உபாதைகளும் வருகின்றன;

  • தங்களைச்சுற்றி எதிர்மறை எண்ணங்களையும், எதிர்மறைசூழலையும் கட்டமைத்துக் கொள்கிறார்கள்;

  • குறைகளையே கண்டு நல்ல உறவுகளை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்;

  • பணிபுரியும் இடத்தில் சக ஊழியரின் நம்பிக்கையை, ஆதரவை இழக்கிறார்கள்;

  • அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு முன்னேற்றம் தடைபடுகிறது;

  • ஒருகட்டத்தில் குறைசொல்லி என்று முத்திரை குத்தப்பட்டு எல்லோராலும் ஒதுக்கப்படுகின்றனர்;

குறைசொல்லும் குணம் யாருக்கும் திடீரென்று ஒரு நாளில் வருவதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும்

  • தாழ்வுமனம்பான்மையை மறைக்கவும்

  • இயலாமையை மறைக்கவும்

  • எரிச்சல், விரக்தி, மனஉளைச்சலை வெளிப்படுத்தவும்

  • ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும்

  • மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும்

தொடர்ந்து ஏதாவதொரு குறையை கண்டுபிடித்து, அதை பெரிதுபடுத்தி சொல்கிறார்கள். யதார்த்தத்தில், இந்த அதீத குறைசொல்லுதல் என்பது ஒருவகையான மனநிலை குறைபாடுதான். அதை படிப்படியாக சரிசெய்ய வேண்டுமானால்


  • உங்களிடம் இருப்பதற்கும் / உங்களுக்கு கிடைத்ததற்கும் நன்றி சொல்ல ஆரம்பியுங்கள்;

  • குறைநிறைந்த இடமானால், அவ்விடத்தில் உங்களால் அப்போதைக்கு முடிந்த திருத்தங்களை செய்தால், அதுவே துவக்கமாக பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பாகும்;

  • எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த நபர்களை இனங்கண்டு அவர்களிடம் இருந்து விலகியிருங்கள்;

  • உடலும், உள்ளமும் ஆரோக்கியத்துடன் இருக்க, தியானம், யோகமுறைகளை கற்று தொடர்ந்து செய்துவாருங்கள்;

புமியில் குறையில்லாத இடமுமில்லை, குறையில்லாத மனிதரும் இல்லை. அதேசமயம், உங்கள் கண்ணோட்டத்தை மாற்றினால், இந்த புமியில் நிறைந்திருக்கும் நிறைகளை, நல்லவைகளை பட்டியலிட ஒரு ஜென்மமே போதாது. உலகின் யதார்த்தம் இப்படியிருக்க, உங்கள் கண்களுக்கு பொதுவாய் புலப்படுவதென்ன? நிறையா? குறையா?


அன்று அன்னியர் ஆட்சி என்று குறைகூறினர்;

இன்று கொள்ளையர் ஆட்சி என்று குறைகூறுகின்றனர்;

நாளை இயந்திர ஆட்சி என்று குறைகூறுவர்;


குறைகளுக்கு எல்லையே இல்லை – ஆனால்

உன் வாழ்க்கைக்கு எல்லை இருப்பதால்

குறைகளை பொருட்படுத்தாமல்

நிறைகளை கண்டு

நேர்மறை எண்ணங்களை வளர்த்து

சமயோசிதமாக வாழக் கற்றுக்கொள்;


- [ம.சு.கு 19.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page