“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-57
ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணிக்காதீர்கள்!
கல்லூரிக் கல்வியை முடித்ததும், பணிக்கு சேரலாமா? சொந்தமாக தொழில் தொடங்கலாமா? என்று பல மாணவர்களுக்கு சிறிய குழப்பம் வரும். போதிய செல்வம் இல்லாத மாணவர்கள், வேலைதான் என்று ஒரே முடிவாய் தெளிவாகச் சென்றுவிடுகின்றனர். சிறிதளவு பொருட் செல்வம் கொண்டவர்களுக்கு, குழப்பம் தொடர்கிறது. இரண்டில் ஒன்றை தேர்வு செய்துதானே ஆக வேண்டும். ஒருவேளை இரண்டையுமே செய்கிறேன் என்று வேலையில் சேர்ந்து கொண்டு, அதனோடு தொழிலையும் செய்ய முற்பட்டால், இரண்டின் வளர்ச்சிக்கு தேவைப்படும் நேரத்தை ஒதுக்க முடியாமல், திண்டாட வேண்டியதுதான்.
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்று ஆசை. அதேசமயம் பள்ளியில் கொடுத்த வீட்டுப் படத்தை முடிக்கவும் வேண்டும். ஒன்றை முடித்துவிட்டு மற்றொன்று செய்யலாம். ஆனால் இரண்டும் ஒரு சேர செய்யலாம் என்று தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பிக்கிறது. காலை முதல் மாலை வரை ஒரு சிறிய வீட்டுப் பாடத்தில் பாதி கூட முடிவதில்லை. ஏன்?
நம்முடைய அறிவையும், திறமையும் நிரூபிக்க, ஒன்று வேலையில் சேர்ந்து நன்றாக உழைத்து முன்னேறலாம். அல்லது சுயமாக தொழில் துவங்கி படிப்படியாக முன்னேறலாம். ஆனால் இரண்டையும் ஒரு சேர செய்து முன்னேறுவது சாத்தியமா? பெரிய வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், எண்ணற்ற நேரத்தை செலவழித்து அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு திட்டமிட்டு உழைக்க வேண்டும். இரண்டையும் செய்ய முயிற்சித்தால், இரண்டிற்கும் போதுமான நேரத்தை ஒதுக்கி அதன் வளர்ச்சிக்கு திட்டமிடுவதில் பெரிய சிரமம் ஏற்படும். அடிக்கடி, இது வேண்டுமா? அது வேண்டுமா? என்ற குழப்பம் வரும். இரண்டையும் ஒரு சேர செய்வதற்கான முயற்சியை விடுத்து, ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கடுமையாக உழைத்தால், அந்த வேலை/தொழிலில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமே. மாறாக, இரண்டும் வேண்டுமென்று பயனித்தால், தினம்தினம் ஏற்படும் சிறுசிறு சிக்கல்களை தீர்ப்பதிலேயே நேரம் கழித்து, சாதாரண நிலையிலையே காலம் கழிக்க வேண்டியது தான்.
குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்து முடிக்க வேண்டியது தன்கடமை என்று தெரிகிறது. அதே சமயம் விடுமுறை நாளில் பொழுதுபோக்கு, விளையாட்டு வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. முதலில் வீட்டுப் பாடத்தை எடுத்து 1-2 மணி நேரம் கவனமாக செய்து முடித்தால், மீதமுள்ள எல்லா நேரத்தையும் மகிழ்ச்சியாக விளையாடி கழிக்கலாம். பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சியும் பார்க்கலாம். இரண்டையும் ஒரு சேர செய்கிறேன் என்று எடுத்தால், இரண்டுக்கும் போதுமான கவனம் செலுத்த முடியாமல், ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வீட்டுப் பாடத்தை, 5 மணி நேரமாகியும் முடிக்க முடியாமல் திணர வேண்டியதுதான்.
ஏன் இந்த இரட்டைக் குதிரை சவாரி? நீங்கள் 8-10 கரங்கள் கொண்ட தெய்வப்பிறவி இல்லை. சாதாரண மனித பிறப்புதான். ஒரு சமயத்தில், ஒன்றின் மீது மட்டுமே நன்றாக கவனம் செலுத்தி சிறப்பாக செய்து முடிக்க முடியும். இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தினால், செய்பவற்றை மிகச் சிறப்பாக செய்ய இயலாது. இது உலகறிந்த உண்மை. யதார்த்தம் புரிந்தும், எண்ணற்ற விடயங்களில் இரண்டில் ஒன்றாக, எது வேண்டும் என்று முடிவு எடுக்காமல் இரண்டையும் தேர்வு செய்து வெற்றிகாண முயற்சிக்கிறோம்.
உடல் எடை குறைய வேண்டும் – சுவையான, வகைவகையான உணவுகளை உண்ண வேண்டும். எப்படி சாத்தியம்?
நாம் நடுத்தர குடும்பமாக இருக்க, நமக்கு அழகான-அறிவான-செல்வச்செழிப்பான பெண் திருமணத்திற்கு வேண்டும். எப்படி சாத்தியம்?
வாகனத்தை எடுக்கிறோம். அவசரமாக செல்ல வேண்டியுள்ளது! அதே சமயமாக பத்திரமாகச் செல்ல வேண்டும்! எப்படி இருசக்கர வாகனத்தில் அதிவேகமும், பாதுகாப்பும் ஒரு சேர சாத்தியம்?
வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும். எப்படி இரண்டும் சாத்தியம்?
இப்படி எண்ணற்ற தருணங்களில் நமக்கு இது வேண்டுமா? அது வேண்டுமா? என்று முடிவெடுக்க வேண்டிய நிலை வரும். அன்றைய சூழ்நிலையையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, எது சரியானதென்று ஒன்றை தேர்வுசெய்து முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து இரண்டும் வேண்டுமென்று, இரண்டையுமே அரைகுறையாக செய்தால், குழப்பங்கள் மட்டுமே மிஞ்சும்.
இரண்டும் வேண்டும்! இரண்டையும் சமாளித்து விடுவேன்! என்று போராடினால் பெரிய வெற்றிகள் சாத்தியமில்லை. ஒன்றை தேர்வு செய்து கவனமாக திட்டமிட்டு உழைத்தால், பெரிய வெற்றிகள் சாத்தியப்படும்.
ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின்மீது பயணம் செய்ய முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. இரண்டு குதிரைகளும் ஒரே நேர்கோட்டில் செல்லும் என்று உறுதிபட கூறமுடியாது. சற்று பிசகினாலும், கீழே விழவேண்டியதுதான்.
ஒன்றை தேர்வு செய்யுங்கள்;
அந்த ஒன்றில் முழு கவனத்தை செலுத்தி
கடுமையாக உழைத்திடுங்கள்;
உங்கள் அறிவும், ஆற்றலும், சாமர்த்தியமும்
ஒன்றின் மீது குவிந்தால்
சாதிக்கவேண்டியவைகள் எளிதாகும்!!
- [ம.சு.கு 05.12.2022]
Opmerkingen