top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-38 – பொய்யோடு எவ்வளவு காலம் உறவாடுவது?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-38

பொய்யோடு எவ்வளவு காலம் உறவாடுவது?


  • வேலைக்கான நேர்காணலில், உங்களுக்கு மகிழுந்து (கார்) ஓட்டத் தெரியுமா என்று கேட்கிறார்கள். உங்களுக்கு ஓட்ட தெரியாதென்றாலும், ஏதோ நினைப்பில் தெரியும் என்று சொல்லிவிடுகிறீர்கள். வேலையில் சேர்ந்த பின்னர், ஏதேனும் ஒரு தருவாயில் உங்கள் மேலாளர் வாகனத்தை ஓட்டச் சொன்னால், உங்கள் வண்டவாளம் தண்டவாளம் எறிவிடாதா?

  • தன்னை பணக்காரன், பெரிய தர்மகர்த்தா, என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு போலி ஆசாமியிடம், ஏழைகுழந்தைகள் கல்விக்கு நன்கொடை கேட்டுப்பாருங்கள். அப்போதைக்கு சமாளிக்க அடுத்தகட்ட பொய்கள் அவிழ்த்துவிடுவார் [பணம் கையில் கொண்டு வரவில்லை, வீட்டில் வந்து பெற்றுக்கொள் என்பார். வீட்டிற்கு சென்றால், அவரை சந்திக்கவே முடியாது]

கார் ஓட்டத்தெரியாமல் பொய் சொல்வதில் கூட அதிகபட்சம் அவமானம் மட்டுமே ஏற்படும். ஒரு வேலை நீச்சல் தெரியுமென்று பொய் சொல்லியிருந்தால், அதை நம்பி அவரை தண்ணீரில் யாராவது தள்ளிவிட்டால், உயிருக்கே ஆபத்தாகியிருக்குமல்லவா!


நண்பர்களுடனும், சமுதாயத்திலும் வாய்கிழிய பேசுகிறோம். கௌரவத்திற்காக தெரியாததைக் கூட, தெரியும் என்று பொய் சொல்கிறோம். அதை நிரூபிக்கவேண்டிய சூழ்நிலை வந்தால், தப்பித்து ஓட முயற்சிக்கிறோம். இல்லாவிட்டால் மாட்டிக்கொண்டு அவமானப்படுகிறோம்.


சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடனும், மரியாதையுடனும் வாழ வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. அதற்கு நம்முடைய வருவாய் ஒத்துழைப்பதில்லை என்று, சில போலியான மாயத்திரைகளை, நம்மைச் சுற்றி நாமே கட்டமைத்துக் கொள்கிறோம்.

  • கண்கள் ஜொலிக்க போலியான நகைகள்!

  • இல்லாத சொத்தை இருப்பதாக ஒரு பிரட்டு!

  • இன்னாரை எல்லாம் தெரியும் என்று ஒரு தம்பட்டம்!

எண்ணற்ற பொய்களை வாய்கூசாமல் சொல்லி, ஒரு போலி பிம்பத்தை ஏற்படுத்துகிறோம். வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிவிட்டு, பின்னர் அது மற்றவர்க்கு பொய்யென்று தெரியாமல் பாதுகாக்க நம்மவர்கள் படும்பாட்டைப் பார்த்தால், சிரிப்புதான் வரும். ஒரு சிலர், தான் கூறுவது பொய்யென்று அடுத்தவருக்கு தெரிந்திருக்கக்கூடும் என்பதை அறிந்தபின்னும் தொடர்ந்து பொய் சொல்லவார்கள். ஏனோ, அவர்கள்க்கு பொய் சொல்வதில் அத்தனைப் பிரியம்!


அளவிற்கு அதிகமாக பொய் சொன்னால்,“அவன் வாயைத் திறந்தாலே பொய்தான் வரும்” என்று முத்திரை குத்தி விடுவார்கள். அப்படிப்பட்ட முத்திரை உங்கள் மீது குத்தப்பட வேண்டுமா? நான் அப்படிப்பட்ட பொய்யனில்லை, அவசரத்திற்கு மட்டும் அளவாக ஓரிரு பொய் சொல்வேன் என்று சமாதானம் பேசுகிறீர்களா? ஒரு நிமிடம் யோசிங்கள்! பொய்யிலே ஒன்றிரண்டிற்கும், நூறுக்கும் அப்படி என்ன வித்தயாசமென்று?


யதார்த்தத்தில், எந்த ஒரு பொய்யும் நீண்ட காலம் நீடித்திருக்க முடியாது. ஒருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியமானால், சில காலம் மறைத்து வைக்கலாம். இருவருக்கு தெரிந்திருந்தால் அது இரகசியமே இல்லை. ஒரு சில நாட்களிலேயே குட்டு வெளிப்பட்டு விடும்


எங்கள் ஊர்களில் ஒரு செலவடை உண்டு “அண்ட புளுகு, ஆகாச புளுகு” என்று.

  • சுழலும் உலகம் [அண்டம்] சுழலாததாய் உணர்கிறோம் [அண்ட புளுகு];

  • இல்லாத ஆகாயத்தை [வானம்] இருப்பது போல் உணர்கிறோம் [ஆகாச புளுகு];

இப்படி ஆண்டப்புளுகும், ஆகாசப்புளுகுமாய் எத்தனை காலம் சொல்லப்போகிறீர்கள். யாரிடம் என்ன சொன்னோம் என்று ஞாபகம் வைத்து அடுத்த முறை அந்த பொய்யை சரிவர தொடர வேண்டும். மறந்து போய் மாற்றிச் சொன்னால், நம்மை நாமே காட்டிக் கொடுத்து விடுவோம். மாறாய், உண்மையை பேசியவருக்கு, எதையும் ஞாபகத்தில் வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், உண்மை என்றும் மாறாதது.


உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


நீங்கள் சொன்ன அண்ட புளுகென்ன?

நீங்கள் சொல்லிய ஆகாச புளுகென்ன?


அவை எவ்வளவு தூரம் உங்களை முன்னேற்றியது ?

அவை எத்தனை மக்களின் உள்ளங்களை வென்றது?


அதேசமயம் உங்களின் சத்திய வார்த்தைகளில்

எத்தனை நம்பிக்கையை விதைத்தீர்கள் ?


பொய்யோடு நீண்ட காலம் உறவாட முடியாது

சொல்லிப் புரியவில்லை என்றால்

நீங்களே பட்டுத் தெரிந்து கொள்வீர்கள்?


வெற்றிக்கு வாய்மையை துணை கொண்டால்

வாழ்க்கை இனிமையாகும்!

மனம் நிறைவாகும்!


- [ம.சு.கு 16.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page