top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-30 – வெற்றியின் இலக்கணத்தை யார் எழுதுகிறார்கள்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-30

வெற்றியின் இலக்கணத்தை யார் எழுதுகிறார்கள்?


  • ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் 35% மதிப்பெண் எடுத்து தேறியதை பெரிய வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருந்தான். அதே பள்ளியில் 95% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவன், எங்கே 5 மதிப்பெண்னை தவறவிட்டோம் என்று வருந்திக் கொண்டிருந்தான். பள்ளி ஆசிரியர்கள், அந்த 95% பெற்ற மாணவனை வெற்றியாளனாக பாராட்டிக் கொண்டிருந்தனர். அதேசமயம் 35% மதிப்பெண் பெற்று தேறிய மாணவனின் வெற்றி கொண்டாட்டம் பெரிதாய் இருப்பதை பார்த்தால் யார் வெற்றியாளர் என்பது எல்லோருக்கும் குழப்பமாக இருந்தது;

  • ஒரு கலைஞனுக்கு இலட்சம் ரூபாய் சம்பளத்தில் கணினி துறையில் வேலை இருந்தாலும், அதை விட்டுவிட்டு தான் பெரிதும் விரும்பும் ஒரு ஓவியனாக, இசையமைப்பாளனாக, நடிகனாக, எழுத்தாளனாக, பேச்சாளனாக விரும்பி களம்காண்பதில்தான் பெரிய மகிழ்ச்சியையும், வெற்றியையும் உணர்கிறான். கையிலிருக்கும் பெரிய வேலையை விட்டுவருபவனை முட்டாள் என்று சமுதாயம் சொல்லாம். தன் இரத்தத்தில் கலந்துவிட்ட இலட்சியத்தை பின்தொடர வாய்ப்பு கிடைத்ததுவே தன் முதல் கட்ட வெற்றியாக கலைஞன் உணர்கிறான்;


தேறமாட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்த மாணவன் 35% பெற்று தேர்ச்சி அடைந்ததில் பெரிய வெற்றியை உணர்கிறான். அவனது மகிழ்ச்சி, முதல் மதிப்பெண் பெற்றவனை விடவும் அதிகமாக இருந்தது. சமுதாயம் 100/100-ஐ வெற்றி என்று சொல்லலாம். ஆனால் அவனது 35/100-ம் அவனுக்கு பெரிய வெற்றிதான்.


கலைப்படைப்பை நோக்கி வந்தவனுக்கு, அவன் விரும்பியதை துவக்கியதே முதல் வெற்றிதான். அவனுடைய முதல் படைப்பில் வெற்றியோ-தோல்வியோ எதுவானாலும், அவன் தன்னம்பிக்கை இழக்காமல் தன்னை மெருகேற்றி தொடர்ந்து புதியதைப் படைக்கிறான். அவனைப் பொருத்தமட்டில் படைக்கும் வாய்ப்பு முதல் வெற்றி. தன் உழைப்பால் மனநிறைவோடு உருவாக்கிய படைப்புக்கள் தொடர் வெற்றி. அவனது படைப்பை சமுதாயம் எப்படி அங்கீகரிக்கிறது என்பதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. அவன் படைப்பதை மட்டுமே யோசிக்கிறான். ஏனெனில் படைப்பதை மட்டுமே வெற்றியாக உணர்கிறான், அதிலிருந்து வரும் பெயரையும், புகழையும் அல்ல.


சமுதாயத்தின் பார்வையில் 35% பெறுவது வெற்றியல்ல. ஆனால் அதே மாணவன் தொழில் துவங்கி, உழைப்பால் முன்னேறி, தன்கீழ் 100/100 வாங்கிய 100 பேரை வேலைக்கு வைத்தால், அவனை மிகப்பெரிய வெற்றியாளனாக சமுதாயம் கொண்டாடுகிறது.


சமுதாயம் தன் வெற்றியின் இலக்கணத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. சமுதாயத்திற்காக நீங்கள் ஓடினால், உங்கள் வெற்றியின் மைல்கள் நகர்ந்து கொண்டேதான் இருக்கும். ஏனெனில் சமுதாயம் வெற்றியை, தன் சூழ்நிலைக்கேற்ப மாற்றி மாற்றி பார்க்கும்.


நல்லவேளை கிடைத்தால் வெற்றி; வேலையை விட்டு தான் நேசித்த கலையின் பின்னால் செல்வது முட்டாள்தனம்; நல்ல மனைவி-மக்கள் அமைத்தால் வெற்றி; குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீடித்தால் தோல்வி; சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் வெற்றியின் இலக்கணம் வேறு. அதே வெற்றி, தனிமனித கண்ணோட்டத்தில் வேறு;


உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்;

  • நீங்கள் வெற்றி பெற்றதாக சமுதாயம் புகழ்ந்தால் உங்களுக்கு மனநிறைவு கிடைக்குமா?

  • நீங்கள் படைக்க முயற்சித்ததை சரியாக படைத்து விட்டேன் என்ற திருப்தியில் உங்களுக்கு மனநிறைவு கிடைக்குமா?

உங்களுடைய வெற்றியின் இலக்கணம் என்ன:

  • சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் வெற்றி வேண்டுமா?

  • எண்ணியதை எண்ணியாங்கு செய்து முடித்தோம் என்ற மனநிறைவா?


இன்று மட்டைப்பந்தாட்டத்தில் சதம் அடித்ததற்காக கொண்டாடிய வீரரை, நாளை பூஜ்ஜியத்தில் ஆட்டம் இழந்ததற்காக, அவரின் வீட்டில் கல் எரிந்து, சாடுகிறது இந்த சமுதாயம். போற்றல்களும், தூற்றல்களும் மாறிமாறி வரும் சமுதாயத்தில், உங்கள் வெற்றியை தீர்மாணிக்கும் பொருப்பை சமுதாயத்திடம் விட்டால், உங்களுக்கு நிம்மதியின்மையே மிஞ்சும்.


உங்களின் வெற்றி எதுவென்று நீங்கள் தீர்மாணித்தால், அதைநோக்கிய ஒவ்வொரு முயற்சியும், முன்னேற்றமும் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும், உத்வேகத்தையும் தந்துகொண்டே இருக்கும்.


உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில்

சமுதாயம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்;

பயணம் உங்களுடையது

இலட்சியம் உங்களுடையது

வெற்றியை மட்டும் ஏன் மற்றவர் தீர்மானிக்க வேண்டும்?


- [ம.சு.கு 08.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page