top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-22 – விளையாட்டு எல்லா வயதினருக்குமானது"

  • Writer: ம.சு.கு
    ம.சு.கு
  • Oct 31, 2022
  • 2 min read

Updated: Oct 31, 2022

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-22

விளையாட்டு எல்லா வயதினருக்குமானது!



  • சிறுவயதில் கிரிக்கெட்[மட்டைப்பந்து] விளையாடிப் பழகியவர்கள், இன்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டையை கையில் எடுத்து சுழற்றத்தான் செய்கிறார்கள். பந்து கையில் வந்தால் சுழலவிட்டு பார்க்கிறார்கள். பழகிய கைகள் அவற்றை ஒருகை பார்க்கத்தானே செய்யும்;

  • கொரோனா பெருந்தொற்று காலத்தில், சில மாதங்கள் வீட்டிற்குள் அடைந்திருந்த காலங்களில், எண்ணற்ற பழமையான விளையாட்டுக்களான தாயம், பல்லாங்குழி, பரமபதம், ஆடுபுலியாட்டம் போன்றவைகள் தான் மக்களின் எளிய பொழுதுபோக்காக இருந்தது. கிராமங்களில் 10-12 பேர் ஒன்றாய் சேர்ந்து தாயம் விளையாடிய அமர்க்களங்கள் பார்ப்பதற்கே பிரம்மிப்பாக இருந்தது;

  • இன்றும் பலருக்கு, பத்திரிக்கையில் குறுக்கெழுத்துப் போட்டி, சுடக்கு போன்றவற்றைப் பார்த்தால், உடனே அவற்றை பூர்த்தி செய்ய துவங்கி விடுவார்கள்;

இதுதான் வாழ்வின் இயல்பு தன்மை. நமக்கு பிடித்த விளையாட்டுகளைக் கண்டால், அதில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தால், உடனே பங்கேற்க மனம் துடிக்கும். அதில் பங்கேற்று தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி வெற்றி காண வேண்டும் என்று போராடும்.


இந்த குணம் உங்களிடமிருந்தால் நீங்கள் வாழ்க்கையை அதன் போக்கில் இயல்பாக வாழ்கிறீர்கள் என்று பொருள். அப்படி ஏற்படும் ஆவலை அடக்கி, தவிர்த்து செல்வீர்களானால், நீங்கள் இயல்பான வாழ்க்கையை விட்டு எதிர்மறையாக உங்கள் எண்ணங்களை வழிமாற்ற முயற்சிப்பதாகவே பொருள்படும்.


குழந்தைகளோ, பெரியவர்களோ, விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது அவர்களின் வாழ்வின் அடிப்படையை தீர்மானிக்கும் ஆணிவேர்.


குழந்தைகள் மத்தியிலான விளையாட்டு, அவர்களுக்குள்


  • பரஸ்பரம் புரிந்துணர்வை வளர்க்கிறது;

  • உடல் ஆரோக்கியத்தை கூட்டுகிறது;

  • ஐந்தில் வளைய கற்றுக் கொள்ளும் உடம்பு, ஐம்பது வரையும் வளைய உறுதுணையாகிறது;

  • குழுவாக சேர்ந்து விளையாடுவதால், மற்ற நபர்களுடன் பரஸ்பரம் ஒன்றுகூடி, விட்டுக் கொடுத்து விளையாட பயிற்சியாகிறது;

  • தோல்விகளை தாங்கிக் கொள்ளும் தைரியத்தை வளர்க்கிறது;

  • தோற்ற இடத்தில் தன்னை நிரூபித்துக் காட்டி அடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற போராடும் குணத்தை வளர்க்கிறது;

  • சிந்திக்கும் திறனை, எதிராளியின் பலம்-பலவீனங்களை அலசும் திறனை, மன உறுதியை வளர்க்கிறது;

இப்படி பலன்களின் பட்டியல் வளர்ந்து கொண்டே போகும் குழந்தைகளோடு கூடி விளையாடிய மகிழ்வதை தவிர்த்து ஏனோ இன்று குழந்தைகள் தொடுதிரையில் விரல் நுனிகளோடு மட்டுமே போராடுகின்றனர்.


எல்லா விளையாட்டுக்களும் குழந்தைகளை தாண்டி பெரியவர்கள் புத்துணர்ச்சி அடையவும், அவர்களின் முயற்சியை ஊக்குவிக்கவும், ஆற்றலை புதுப்பிக்கவும் பேரு உதவியாய் இருக்கிறது.


  • சதுரங்க விளையாட்டுக்கள் நம்முடைய பகுப்பாய்வுத் திறனையும், எதிராளியின் வியூகங்களை கணிக்கும் ஆற்றலையும், அதற்கு இணையான ஆட்டத்தை திட்டமிடும் ஆற்றலையும் வளர்கிறது;

  • மட்டைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, இறகுப்பந்து போன்ற விளையாட்டுக்கள், உடலில் இருந்து வேர்வையை வெளியேற்றி, தேவையற்ற கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.;

விளையாட்டினால் ஏற்படும் பயன்களின் பட்டியல் மிகப்மிகப் பெரிது. இது நாம் எல்லோரும் அறிந்தது தான்.


விளையாட வயது ஒரு தடை இல்லை;

விளையாட்டு உங்களை புத்துணர்வடையச் செய்து

தடைகளை தகர்க்கும் வலிமையை அளிக்கும்;


கைப்பேசி தொடுதிரையில் விளையாடுவதை குறைத்து,

களத்தில் விளையாடுங்கள்;

உங்கள் குழந்தைகளை களம் காண ஊக்குவியுங்கள்.


எத்தனை வேலைப்பளு இருந்தாலும், தினமும் சிறிது நேரம் விளையாட நேரம் ஒதுக்கி, உடம்பை வளைப்பதோடு, மனதையும் புத்துணர்வடையச் செய்யுங்கள்.


- [ம.சு.கு 31.10.2022]

Recent Posts

See All
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

 
 
 

Commentaires


Post: Blog2 Post
bottom of page